30 ஜூன், 2011

இங்கா...



இங்கா...

இதோ எங்கோ ஒரு அசௌகர்யம்
ஆரம்பமாகி விட்டது
இப்போது நெளிய ஆரம்பிக்க வேண்டும்
மேலே அதென்ன ஒரு முகத்தையும்
காணவில்லை
சரி கொஞ்சமாக கத்திப்பார்ப்போம்
வந்து விடுவாள்
"இங்கூ... இங்கூ..."

தலையை திருப்பி திருப்பி பார்த்தும்
ஒன்றும் தெரியவில்லை
இம்ஹூம் வருவதாக தெரியவில்லை
அதற்குள் ரொம்ப வயிற்றை என்னமோ செய்கிறதே
சரி வேறு வழியில்லை வேகமாக கத்த...
உர்ரே...உர்ரே.....இம்ம்ம்...ம்மா...
இங்கா....இங்கா....இங்கா...

அட பதறியதித்து வருபவள்
அவளே தான் என் தேவதை, அம்மா

அச்சச்சோ பிள்ளைக்கு பசிக்குதா?
இதோ அம்மா வந்துட்டேன்
அழாத செல்லம் என்று
இன்னும் என்னென்னவோ சொல்லி
தூக்கி கொஞ்சினாள்
பாலை வாயில் கொடுப்பதாய் தெரியவில்லை

இரு தங்கம் பாட்டி இங்கா ஆத்துறாங்க
இப்போ சாப்பிடலாம்
என்றபடி தூக்கி தோளில் சாய்த்துக்கொண்டாள்
இப்போ கொஞ்சம் அதென்ன? பசி... பரவாயில்லை
அட திரும்பவும் என்ன
இனி முடியாது
மீண்டும் கத்த வேண்டும் போலிருக்கு
அப்போதான் தருவாங்க
ஆ...இங்கா...இங்கா...

அப்போது பால் புட்டியின்
முனை வாயில் செருகப்பட
அப்பாடி ஒரு வழியா கொடுத்.....
முடக் முடக் என்று குடித்த வேகத்தில்
எல்லாம் மறந்து போயிற்று

அட குடித்து முடித்து விட்டேன்
இன்னும் இந்த அம்மா
புட்டியை எடுக்க மாட்டேங்குறாளே?
திரும்ப முயற்சி செய்த போது
இன்னொரு கை தலையை
நகர விடாதபடி பிடித்தது

வாயையும் வெளியில் எடுக்க முடியல
தலையையும் திருப்ப முடியல
ஆனா நான் குடிச்சிட்டேனான்னு
கூட பாக்க மாட்டேங்குறா...
என்ன அம்மா இவ?
சரி இப்படியே இன்னும்
எவ்வளவு நேரம் இருக்கனுமோ?

குழந்தை குடிச்சுட்டன் பாரு
தூக்கி தோளில் போட்டுத்தட்டு
ஏப்பம் விடட்டும்
என்ற அந்த குரல்
நல்ல வேளை சீக்கிரமே வந்தது.

அடாடா குடிச்சிட்டியா
சரி என்றபடி ஏப்பம் விட வைத்தாள்
பின் மீண்டும் கொஞ்சி விட்டு
படுக்கையில் போட்டு விட்டாள்
துணியை மாற்றி துடைத்துவிட்டு

மாவு அடிக்கும் போது
கொஞ்சம் வாசம் வந்தது
நல்ல நெடி மூக்கில் ஏறிவிட சச்சு இதென்ன?
அய்யோ பிள்ளை தும்முறான் சளி இருக்குமோ?
எதையோ எடுத்து தலையிலும் நெஞ்சிலும் தடவ
இது என்ன வேறு வாசத்துடன் ஜில்லுன்னு இருக்கே
கொலோன் தடவினா சளி சரியாகிடுமாம் தங்கத்துக்கு
சொல்லிக்கொண்டே தேய்த்தாள்
சளி இருந்தாத்தானே?

பவுடர் மூக்கில் ஏறி தும்மினேன்னு இவளுக்கு ஏன் புரியல
மக்கு அம்மா
இன்னும் என்ன செய்யிறா?
இந்த வெயில்ல கைக்கும் காலுக்கும் உறை போடுறாளே
இனிமே குளிறாது நல்லா தூங்குங்க சரியா?
மறுபடியும் முத்தம்

மடியில் கிடத்தி...
ஏன் இப்படி தட்டுகிறாள்?
நானே தூங்குவேனே...
இது என்ன கண்ணை மூடி இழுக்குதே
சரி இம்ம்..தூங்குவோம்....

ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் இங்கா...