10 அக்டோபர், 2017

கல்வி

இங்கொன்றும் அங்கொன்றுமாய் 
புத்தகங்கள் சிதறிக்கிடக்க
தலையைக் குனிந்தபடி
படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் தானிருக்கிறான்
படித்தே ஆகவேண்டும் வேறு வழியில்லை என்ற சிந்தனையை அவணுள் திணித்தபடி
கல்விச்சுமையை கறுவியபடி
காத்துக்கொண்டிருக்கிறேன்
அவன் எழுதிய விடைத்தாளை திருத்துவதற்காக
முழுதும் பள்ளியை நம்பி அவன் படிப்பை விட முடியாத என் இயலாமைக்காக
அவனை வதைத்தபடி...

8 ஜூன், 2017

மென் வில்லை

விரல் நுனியில் தொட்டு 
விழிகளில் இட்டு
கண்ணாடியில்
முகம் பார்க்க 
பிரகாசம்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை 
சரியான அளவுகளில் நிறங்களில்
அனைத்தும் ஆச்சர்யம்

அவ்வப்போது திறளும் கண்ணீர் 
மட்டுமே என் எதிரி இப்போது 
வழுக்கிவிடலாம் என் விழிகளில் புதியதாய் 
புகுந்திருந்த அந்த மென் வில்லை

18 மே, 2017

சீக்கிரம் வளரணும்..


“விருப்பமானதை சாப்பிடக்கூட முடியவில்லை சீ இதெல்லாம் ஒரு வாழ்வா?” கோபமாக வந்தது ராமுவுக்கு. பிக்கி ஈட்டர்ன்னு பேரு வச்சி பிடிக்காததெல்லாம் தட்டுல வச்சி சாப்பிட்டே ஆகனுன்னா, எப்படி சாப்பிடுறது? ச்சே… சின்ன பிள்ளையாவே பிறக்க கூடாது, டூ டிரபிள்சம். சின்ன பிள்ளையா பிறக்காம வேற எப்படி பிறப்பாங்களாம்? என்றும் தோன்ற லேசாக சிரிப்பும் வந்தது.
எங்கம்மா, நல்லா சாப்பிடலன்னா உடலுக்கு சக்தி கிடைக்காதுன்னு ஆரம்பிச்சு ஒரு மினி டைஜஷன் வகுப்பே எடுப்பாங்க. இவங்க என்னை சாப்பிட வைக்குறதுக்காகவே அறிவியல் படிச்சாங்களோன்னு இருக்கும். அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட். சாப்பிட்டே ஆகனும்னு வற்புறுத்தல். வயிறு நிறைய சாப்பிட்ட பின்னும் அது போல இன்னொரு அளவு சாப்பிட சொல்லி பாடாய் படுத்துவார். லீவு நாளுன்னா  நான் தொலைஞ்சேன், தட்டு நிறைய சாப்பாடு போட்டு முழுக்க முடிக்கிறவரை அவரே ஊட்டுவார்.
எனக்கு மட்டும் பவர் இருந்தா அவருக்கு மூன்று ஃபுல் மீல்ஸ் வாங்கி தந்து ஃபினிஷ் பண்ணிட்டு தான் எழுந்திரிக்கனும்னு ஃபோர்ஸ் பண்ணுவேன். அப்ப தெரியும் என் கஷ்டம் என்னன்னு.
அப்படியெல்லாம் நான் ஒன்னும் பெரிய அண்டர்வெயிட் இல்ல. ஒன்பது வயசு, எடை 20 கிலோ. பள்ளி குறிப்பெட்டில் ஒத்துக்கொள்ளகூடிய எடைன்னும் இருக்கு. ஆனா அவர் மட்டும் ஒத்துக்க மாட்டார்.
போன மாதம் எனக்கு ஜுரம் அடித்து விட்ட பின் இன்னும் மெலிஞ்சுட்டேன். சும்மாவே சாமியாடும் அப்பா தினம் பேயாட்டம் ஆட அரம்பிச்சுட்டார். அதன் பலனாக தினமும் ருசியே தெரியாத மருந்து சாப்பிட்டு மறத்த நாக்குடன் நிறைய சாப்பிட வேண்டியதாயிற்று. அப்புறமும் எடை துளிகூட ஏறல. எனக்கு ஏதோ உடற்குறை இருக்கிறதா நானே நம்ப ஆரம்பிச்சுட்டேன்.
நல்லவேளை பாட்டி தான் சொன்னாங்க எடையப் பத்தி கவலைபடாதடா நல்லா ஓடி விளையாடு பசிச்ச பின் உனக்கு பிடிச்சதை சாப்பிடு. உடம்பு ஆரோக்கியமா இருக்கும், பயப்படாதே, உனக்கு ஒன்னுமில்லன்னு.
எனக்கு மைலோ ரொம்ப பிடிக்கும், சிக்கனும், முட்டையும் கூட பிடிச்சுது ஒரு நாள் அண்ணாவின் வாட்சாப் குரூப்ல அந்த மெசேஜ் பாக்குற வரை…”இன்னிக்கு அம்மாவையும் பிள்ளையையும் சாப்பிட்டோம்”னு கொடுமையா எழுதி இருந்தாங்க. அப்புறம் விட்டுட்டேன். மட்டன் பிடிக்கும் ஆனா வாரம் ஒரு நாளுக்கு மேல சாப்பிட்டா நல்லா இல்லை. கீரை, பூரி, ரோட்டிப்ராட்டா, தோசை, நூட்ல்ஸ், சாம்பார், தயிர் சாதம், பச்சை ஆப்பிள், திராட்சை, தர்பூசணி , கோன் தோசை, ப்ரெட், டொமேட்டொசாஸ் னு என் லிஸ்ட்ல இன்னும் நிறைய இருக்கு.
இதுல எல்லாம் எந்த சத்தும் இல்லன்னு அப்பா சொல்வார். “சத்து இல்லனா ஏன் ஃபுட் பிரமிட்ல போட்டு உலக உணவு கழகம் பரிந்துரை செஞ்சிருக்கு” னு நான் கேட்டதுக்கு அவர் இன்னும் பதில் சொல்லவேயில்ல. அதன் பிறகு அவர் எந்த காரணமும் இல்லாம கத்துறதா தோணுது.
நான் கோயிலுக்கு போயி வேண்டிக்கிறது எல்லாம் அப்பா வீட்டுக்கு வந்தா அமைதியா இருக்கனும் சாமின்னுதான். ஆனா சாமி தான் பாவம் பிசியா இருக்கு போல அதான் இன்னும் செய்யல. நான் சீக்கிரம் வளரணும்….






14 அக்டோபர், 2016

இடுக்கண் வருங்கால் நகுக

வள்ளுவர் இதை ஏன் எழுதினார் என்று சிந்தித்தால், ஓவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் தோன்றும். ஆனால் இப்போது எப்படி யோசித்தாலும் ஒரே ஒரு  காரணம் தான் தோன்றுகிறது. இன்பமும் துன்பமும் ஒன்று முடிந்து மற்றது வருகிறது, நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் மாறுபாடு. எது வந்தாலும் முழுவதும் எதிர்க்காமல்  நம்மை தாண்டிச் செல்ல அனுமதித்தால் தானே ஓடி விடும். இதைத்தான் வள்ளுவர் கூறியிருக்கிறார். போராடி பார்த்து இது சரியான வழி இல்லை என்பதை மனப்பூர்வமாக புரிந்து கொண்டால் மட்டுமே இந்த புரிதல் சாத்தியம்.

13 அக்டோபர், 2016

அம்மாவின் ஆசிர்வாதம்

காலையில் வழக்கம் போல் வேலைகளை முடித்து விட்டு அம்மாவிடம் தொலைபேசியில் பேசினேன். வாழ்க்கை பல பாடங்களை கற்று கொடுக்க அவற்றை அலுப்பில்லாமல் மனதிடத்துடன் கற்று, பல இன்னல்களை தாண்டி திடமான இப்போதிருக்கும் அம்மாவின் மேல் அன்பும், மதிப்பும் அதிகமாகிறது.

எவ்வளவு பெரிய பிரச்சனை ஆனாலும் இலகுவாகவும் தீர்க்கமாகவும் முடிவு எடுத்து அதில் திடமாக நிற்கும் இயல்பு அவரிடம் முன்பிருந்தே இருப்பதுதான் என்றாலும் என் பதினைந்து வருட திருமண வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களில் அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு அணுகுமுறையும் எவ்வளவு சரி என்பது தெள்ளத்தெளிவாக இப்போது புரிகிறது.

நீண்டகாலமாக எழுதுவதை விட்டு இப்போது மீண்டும் தொடங்க வேண்டும் என்ற ஆவல் இருப்பதை நான் சொன்னவுடன் "உடனே ஆரம்பித்து விடு" என்றார். "எழுதினால் யாருக்கேனும் உபயோகமாக எழுத வேண்டும் இல்லாவிட்டால் பயன் இல்லை அம்மா" என்ற போது நெத்தியடியாய் ஒன்று சொன்னார், "உனக்கு பிடித்ததை, நீ அவதானித்த செய்திகளை எழுதுவதற்கு என்ன தயக்கம்? இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் உன்னால் எதையுமே செய்ய முடியாது, தயங்காமல் ஆரம்பித்து விடு" என்றார். "எழுதுவது உனக்கு விருப்பம் என்றால் எழுது. என்ன பயன் வேண்டும். அந்த செயல் தரும் நிறைவே பயன் தான்". என்றார். சரி தானே என்று நினைத்த போது, கூடவே மேலும் ஜீரணிக்க சிரமமான சில குண்டுகளையும் தூக்கிப் போட்டார்.

"இந்த உலகத்தில் யாருக்கும் எதுவும் உருப்படியாக செய்ய தெரியாது, யாராவது ஒரு நோக்கம் கொண்டு எதையாவது முயற்சி செய்தால் அதை விமர்சனம் செய்யத்தெரியும், பின் இவங்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமானது என்று அங்கலாய்க்க தெரியும். ஏதாவது செய்து அந்த முயற்சியை தடை செய்யத்தெரியும். இது உனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அதே தான். இந்த தடங்கல்களைத் தாண்டி தைரியமாக என்று செல்கிறாயோ அன்று உனக்கு எல்லா முயற்சியும் பலன் அளிக்கும்" என்றார்.

உண்மை தானே? எல்லாம் நிதர்சனம். சரி முயற்சிப்போமே என எழுத தொடங்கி விட்டேன். நன்றி அம்மா.