3 நவம்பர், 2011

மறந்து போன தமிழ் தட்டச்சு

மிக நீண்ட காலமாய் திறக்கப்படாத தமிழ்ச்சோலைக்குள் இப்போது சும்மா போவோமே என்று பார்த்தால் அட நாமா இவ்வளவு வளவள என எழுதி தொலைத்திருக்கிறோம் என ஆச்சர்ய படும்படி பழைய இடுகைகள் எல்லாம் யாரோ எழுதியது போல் அன்னியபட்டு நிற்கின்றன. அஹா மறுபடியும் எழுதியே ஆகவேண்டும் என்ற தோன்ற தமிழில் தட்டச்ச தாறுமாறாக போகிறது வார்த்தைகள். இதுவரை எழுதாததால் இணையத்தில் என் பங்குக்கு சில குப்பைகளை சேர்க்காமல் இருந்த திருப்தியை இப்போது இழக்கப்போகிறேன். சரி. இன்னும் 1 எம் பி சேர்வதால் இணையம் கனமாகிவிடாது என்ற எண்ணத்தில் தொடர்கிறேன். வெட்டித்தனமாக இல்லாமல் எதையாவது செய்தே ஆக வேண்டும் என்று செய்த நேரம் போய், இன்னும் கொஞ்சம் நேரம் அதிகமாக கிடைக்காதா என்றாகிவிட்டது வாழ்க்கை. மனதின் பழைய நிறைவின்மை கொஞ்ச காலம் புதிய சவாலான வேலைக்குள் ஒளிந்திருந்தது போலும்... இப்போது மெல்ல மீண்டும் தலை காட்ட ஆரம்பித்து விட்டது. வேலை செய்யாமல் வீட்டிலிருப்பது தான் நிறைவின்மை தருகிறது என்ற தப்பான எண்ணம் இப்போது இல்லை. ஆனால் எதை கொட்டி நிறைப்பது என்பது பெரிய கேள்வியாய் இருக்கிறது. கேள்வியே தெளிவாக இல்லாதபோது பதில் எப்படி கிடைக்கும்? இது இப்படித்தான் வெகுகாலமாய் என்னை குடைகிறது. சரி எதில், எப்பொது பதில் வருமென விழித்திருக்கிறேன்.