இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8 டிசம்பர், 2010

மலையருவி...

வரவேற்கும் ஈர மண்
கரும்பாறைகள்
ஓர் ஆயிரத்துக்கும்
குறைவில்லா குரங்குகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஹோவென்ற சத்தம்
அருவியின் லயத்தை
அறிவுறுத்த
அந்தச் சாரலுடன்
மழைச்சாரலும்
சேர்ந்து கொள்ள
மனதின் சக்தி நிலை
மாறுதல்களை
சொல்லிட வார்த்தைகளே
இதுவரை இல்லை
அருகில் சென்று
கால்கள் நனைக்க 
ஜில்லென்று குளிர்
ஊசிபோல் இறங்கியது
முழுவதும் இறங்குவதா
வேண்டாமா என்ற
கேள்வி உடனடியாக
விடைபெற்றுக்கொள்ள
அருவியின் மடியில்
அழகான தாலாட்டு....
இயற்கையின் மற்றொரு
குழந்தை...
மலையருவி.

3 ஜூலை, 2010

மலர்..

உன் இதழ்களோரம்
ஈர மென்மை

பார்த்தவுடன் புத்துணர்வு

காய்ந்திடத்தான் போகிறோம்

எனத்தெரிந்தும் சுணங்காமல்

அழகை அள்ளித்தருகிறாய்...

வண்ணத்திலும் வாசத்திலும்

மனதை கொள்ளை கொள்கிறாய்...

இன்றலர்ந்த மலர் நீ

ஒர் ஆயிரம் அழகை

தோற்கடிக்கும் அரசி நீ

காலையில் பிறப்பும்

மாலையில் இறப்பும்

விரும்பி ஏற்கும்

அதிசய அழகி நீ...

உனை எங்கு பார்த்தாலும்

நின்று விடத்தோன்றுகிறது.

கண்களால் படம்பிடித்து

மனதில் பதித்து

பத்திரப்படுத்த...

எத்தனை முறை

கவி வார்த்தாலும்

போதாது போலவே

உன்னழகை அரைகுறையாய்

சொன்னது போலவே...

தவிப்புடன் நான்...

இயற்கையின்

பிரம்மிப்பில்

முதலிடம் உனக்கு....

14 ஜூன், 2010

சந்தியாக்காலம்


இளமஞ்சள் வெயிலும்
இதமாயில்லை
தென்றல் காற்றும்
சுகமாயில்லை
என்னே என் தனித்தீவில்
கையில் புத்தகத்துடன் நான்..

இங்கே வந்தும்
புத்தகமா அம்மா?
சிணுங்கும் என்
செல்லத்தின் குரல்..

இடையே வேறு ஒர் சங்கொலி
அட என்ன இது சத்தம்
படித்துக்கொண்டிருந்த
கவனம் சிதறி
நிமிர்ந்த போது..

நகரும் கட்டடம்  போல்
தன் பயணத்தை
துவக்கியிருந்த
ஸ்டார் விர்கோ...


ஆச்சர்யித்தபடி
கண்களை மீண்டும்
புத்தகத்துக்கு
திருப்புமுன்.. 

ஒரு கனம் விருந்தளித்த
அந்தக் காட்சி...


மேற்கில் அந்திசூரியனின்
சிவப்பு வண்ண அமர்க்களம்..








எதிர்திசையில் வெளிர் நீலம்
வெண்மேகத்தையும்
வான்நீலத்தையும்
சாம்பல் நிறமாக்கி பின்
கருமையாக்கவும்
இரவு படும்
ரசிக்கும்படியான அவசரம்...

நடுவானில் இரண்டும்
கலந்த ஊதா
அதிலும் சிவப்பு வெளிச்சம்
அங்கங்கே கீற்றுகளாய்...

அதுவரை
தூங்கிக்கொண்டிருந்த
விளக்குகளின்
கண்விழிப்பு
ஒவ்வொன்றாய்...

காற்றும் இப்போது
சில்லென்று...

கண்களுக்கு
ரசனை
வரும்போது...

தினமும் நாம்
பார்க்கும்
காட்சிகளும்
கவிதைகளாய்...

18 மே, 2010

கருமை

நிழல் எழுத தேவைப்படுவாய்
நீயின்றி மெருகில்லை
எவ்வோவியத்துக்கும்
கோடுகள் எழுதவும்
புள்ளிகள் வரையவும்
நிறத்தை ஆழமாக்கவும்
கூட பயன்படுவாய்...
ஆம் நிறத்தின் ஓரம்
தூங்கும் கருமை நீ...
நிறத்தின் ஓரம் மட்டும் தூங்கு
மனிதர்கள் கண்களின் ஓரம்
உனகென்ன வேலை...?

2 மே, 2010

இயற்கை

மேகங்கள் மோதிச்செல்லும்
குளிர் நடுங்க வைக்காமல்
வருடிச்செல்லும்...

சத்தமில்லா அந்த
உயர்ந்த இடம்...

எங்கு பார்த்தாலும்
பச்சை பட்டு உடுத்தி
ஒய்யாரமாக
ஓங்கி நிற்கும்
மலைகள்...

இடையிடையே
வெண்ணிற முத்துக்கள்
கோர்த்த சரம் போல்
சலசலக்கும் அருவிகள்...

மூச்சிழுக்கும் போதே
சேர்ந்துள்ளே
செல்லும் அந்த புத்துணர்வு...

அங்கேயே உறைந்து
இன்னும் சில நேரம்
நிற்க விழையும் ஏக்கம்...

காங்கரீட் சிறைகளில் (வீடுகளில்)
வாழும் நவீன கைதிகள்
நாம்...
வருடம் ஒரு முறையாவது
இயற்கை அன்னையின்
ஈடில்லா அழகிய
மடியில் தவழ்ந்து
செல்லமாக விளையாடினால்

மகிழ்ச்சிகடலில் மிதக்கும்
சிறு படகாய் ஆடலாம்...

29 மார்ச், 2010

பிரபஞ்சம்

ஏதும் இல்லா
ஒன்றில்லிருந்து
எல்லாம் வந்தது

நினைத்து பார்க்க
முடியாத சின்ன
இடத்தில் தோன்றி

நினைத்து பார்த்து
பிரமிக்க வைக்கும்
பெரிய அளவில்
நம் பிரபஞ்சம்

தூசித் துகள்களின்
அடர்வில்
பறக்கும் சிறிய
தூசித்துண்டில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
சின்ன துளி நாம்

பிரமிக்க வைக்க
இயற்கை இருக்கிறது...

பிரமித்த படியே
நாம் இருப்போம்...

23 மார்ச், 2010

கடற்கரை

கலங்கரை வீதியில்
நீலப் புன்னகை
கடலா? வானா?
கேள்விக்கொக்கிகள்
சிவப்பா? மஞ்சளா?
அந்திச் சூரியன்
வெள்ளையாய் கறுப்பாய்
மணலில் சிப்பிகள்
பெரிதாய் சிறிதாய்
சிறுவர் கோட்டைகள்
வேகமாய் மெதுவாய்
நதியில் படகுகள்
என்றென்றும் சலிக்காத
அழகான அலைகள்
இமை நனைந்து
மனம் குமுறி
களைத்து வருவோரை
இதமாய் வருட
வரும் கடற்காற்று
இது போதும்
இப்போது
மனம் நிறைந்து
வழிகிறது மகிழ்ச்சியில்
நன்றி! இயற்கை!
மறுபடியும்
உனைப்பார்க்கும்
கணம் வரை
விழியோரம் ஆவல்
மனமெல்லாம்
ஏக்கம்.....

6 மார்ச், 2010

வெ - பா

வெள்ளியன்று விடியல்
வெண்பனிச்சூழல்
வெங்கலத் தகடு வானில்
வெட்டுப்படா மரம்
வெறுக்காத ரீங்காரம்
வெளிச்சக் கீற்று
வெயில் கன்று
வெள்ளை நிறப் பறவை
வெற்றிக் கொண்ட பார்வை
வெளியே நம் உலகம்
வெறுக்காது நாளும்
வெளியேற்றிடு வஞ்சம்
வெட்டி வீழ்த்திடு வெஞ்சினம்
வெல்லம் போல் நெஞ்சம்
வெகுமதி உன் தஞ்சம்

12 பிப்ரவரி, 2010

எரிமலை

தினம் குழம்புகிறாய்
குமுறுகிறாய்
கொதிக்கிறாய்
கனலை கக்குகிறாய்
தீயில் எரிக்கிறாய்
நீ பலசாலி ????

எத்தனை முறை
நெருப்பு ஊற்றி
கருக வைத்தாலும்
மீண்டும் துளிர்க்கும்
உன் மேல்
சிறு செடி....
அது ???!!!

10 பிப்ரவரி, 2010

நிலவு சொல்வதென்ன?

காலை ஐந்து மணி
பூங்கா
வானில் முழு நிலா

இருதினம் கழித்து
மாலை நேரம்
வானில் சற்றே
இளைத்த நிலா


பின் ஒரு நாள்
காலை நேரம்
வானில் பாதி நிலா


மற்றொரு நாள்
இரவு நேரம்
வானில் கீற்றாய் நிலா


வேறொரு நாள்
மாலை நேரம்
வானில் எங்கே நிலா?


அன்றொரு நாள்
அம்மாவின் மடியில்
அமர்ந்து
அது என்ன ம்மா?
அது தாண்டாக் கண்ணு
தங்க தட்டு....... நிலா....
அம்மா அறிமுகம் செய்த
அதே நிலா


உண்மையில் அது
தேய்வதுமில்லை
வளர்வதுமில்லை


அறிவியல் தந்த அறிவில்
நிலா வேறு
முகத்தை காட்டியது


பின் எதற்கு தான்
பூமியை சுற்றி சுற்றி
வருகிறாய்?


நிலவிடமே கேட்போமே ....


நான் தினமொரு முறை
பூமியை சுற்றி வருகிறேன்
முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்
தேய்கிறேன்
வாழ்வில் சோகங்களும்
வீழ்ச்களும் அநேகம்
இல்லாமல் போகிறேன்
எது வேண்டுமானாலும்
இல்லாமல் போகலாம்
வளர்கிறேன்
தோல்வியை
கண்டு துவளக் கூடாது
முயற்சியில்
வெல்வோம்
யாவற்றையும்
பிரகாசிக்கிறேன்
எல்லோரிடமும் பங்கு
போட வேண்டும்
இன்பத்தை

வாழ்க்கை மிகவும் சிறியது
வாழ்வதும் வீழ்வதும்
உன் கையில்

வாழவும் பழகு
தவறி வீழ்ந்தால்
முனகாமல்
எழவும் பழகு

வீழ்ந்ததை பாடமாகவும்
வாழ்வதை பீடமாகவும்
மாற்று .....

நிச்சயம் வெற்றி அடைவாய்!

22 ஜனவரி, 2010

வெங்காயம்

ஆமாம்...
நான் ஒன்றுக்கும்
உபயோகம் இல்லை தான்
உரிக்க உரிக்க
ஒன்றுமே இல்லை தான்
ஆனால்
உரித்துக்கொண்டெ
நீ ஏன் அழுகிறாய் ?

21 ஜனவரி, 2010

அருவி

ஓடி வந்து குதித்து
தற்கொலை செய்து கொள்ள
அப்படி என்ன சோகம் உனக்கு?

ஓ உன் கடற்க் காதலனை காண
வேகமாக போகிறாயோ?