29 ஏப்ரல், 2010

புன்னகை

சகியே உன் உதடுகள்
இரண்டும் நீண்டு
கண்கள் இரண்டும் மலர்ந்து
எப்போது சிரிப்பாய்
எனைப்பார்த்து...

என காத்து கிடந்தேன்
காதலிக்கும் போது...

அந்த அழகில்
அமிழ்ந்து கிடந்தேன்
பல காலம்...

இப்போதும் ஏக்கத்துடன்
காத்துத்தான் கிடக்கிறேன்
நீ   நம் குழந்தைகளை
கவனிப்பதை முடித்து
என் பக்கம் எப்போது
பார்ப்பாயென்று...

ஒரு பிள்ளை இடையில்
தூக்கி ஒரு பிள்ளை
கையில் பிடித்து
நடக்கும் அழகில்
அமிழ்ந்து தான் போகிறேன்
இப்போதும்....

ஆனால்  நீ மட்டும் சகியே
அப்படியே இருக்கிறாயே
அதே புன்னகையுடன்...

நாஸ்த்தி - நாஸ்த்திகன்

"தம்பி நல்லா படிக்கனும், சமத்தா நடந்துக்கனும், நல்ல மதிப்பெண் எடுக்கனும்" என்று தினம் பாடும் பல்லவியை நான் பாட இடைமறித்த என் மகன் "நல்ல மார்க் எடுக்கலைனா நான் நாஸ்த்தி ஆகிடுவேன் அம்மா" என்றான்.  "ஏன்டா அப்படி சொல்ற..?" இது நான். "நாஸ்த்தின்னா தெரியாதா உனக்கு? அது தான் நான் பாரதி படத்துல பார்த்தேனே சாமிகிட்ட பேசுவாரே அவர், டாக்டர் க்கு கொடுக்க காசில்லை, இது போல் துன்பங்களுக்கு உட்படுத்தி கொண்டிருந்தால் நான் நாஸ்த்தி ஆகிவிடுவேன்னு பாரதியார் சொல்வாரே? அந்த நாஸ்த்தி தான், டாக்டர் கூட எனக்கு காசே வேணாம்னு சொல்லிடுவாரே" என்றான்.

 படத்தில் வருவதை யோசித்து விட்டு அது நாஸ்த்தி இல்லடா நா
ஸ்த்திகன், அவனுக்கு விளக்க "அப்படியா?" என சிரித்தான்.

19 ஏப்ரல், 2010

சில்லரை

கையில் சில்லரையுடன்

பேருந்து நிலையத்தில்

காத்திருப்பு...


பிச்சை கேட்டு ஓரு

சிறுவன் என் அருகில்...



கிழிந்த ஆடைகளுடன்

தலையில் எண்னெய் இன்றி..



கொடுக்கலாம் தான்

அதன் பின்

நடக்கபோகும் நிகழ்வு??



அங்கிருக்கும் அத்தனை

பிச்சைகாரர்களும் நம்மை

முற்றுகை இடுவதாக..



என் கண்முன்னே

பயமுறுத்த...



சற்றே யோசித்தபடி நான்



அதே கண​த்தில்

என் கையிலிருந்து

ஒரு நாணயம்

தரையில் தேங்கியிருந்த

அழுக்குத்தண்ணீரில்

விழ..



சடாரென குனிந்து

எடுத்தான்..

யோசனையாக என்னை

பார்த்தான்..

நீயே வைத்துக்கொள்

என்றேன்..

சொல்லிவிட்டு நாம் ஏன்

எடுக்கவில்லை..

எவ்வளவு சாமர்த்தியம்

அவனுக்கு..

இனி நடத்துனரிடம்

நூறு ரூபாய்

தந்து சில்லரை வாங்கி

அடக்கடவுளே..



சற்று நேரத்தில்

கையில் அரை அளவு தீர்ந்த

தின்பண்ட பாக்கேட்டுடன்

அவனே தான்..



நிஜமாகவே பசியா??

ஏதோ ஒன்று

அறைந்தது போல்

இருந்தது..



எத்தனை

அம்மா பசிக்குது வை

அலட்சிய படுத்தியிருக்கிறோம்...



இனி இவர்களுக்கென

தனிச் சில்லரை

என் பையில்

எப்போதும் இருக்கும்...

கவலை

தனியார் நிறுவன அறிவிப்பு பலகை.

புதிய அறிவிப்பு:

ஏதேனும் ஒரு காரணம் தேடிப்பிடித்து எப்போதும் கவலைப்படும் ஊழியர்கள் கவனிக்க..

நாள் முழுதும் உங்கள் கவலை வேலையை பாதிக்காமல் இருக்க..ஒரு வழி..

3 மணிக்கு கொடுக்கப்படும் தேனீர் இடைவேளையில் கவலைப்பட நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள். ஒரு நாளுக்கு 1/2 மணி நேரம் கவலைப்படுங்கள் அது போதும், பின்பு 3.30 லிருந்து சரியாக வேலை செய்ய வேண்டும்..

மீறினால் அபராதம் உண்டு.


இதை பார்த்த பின் வந்த சில கமெண்ட்டுகள்.....

முழு நேரம் கவலைப்படும் அன்பர் 1

"அய்யோ எல்லாத்தையும் விட்டுட்டா அப்புறம் யார் தான் அவ்வளவு கவலையும் படுறது. இதெல்லாம் நடக்கிற காரியமா?"

கவலைப்படும் அன்பர் 2

"டீ குடிக்கும் போது கவலை படுவதா? அட போய்யா சான்ஸே இல்ல. என் மனைவியை இப்பல்லாம் டீ நேரத்துல தொலை பேசாதேன்னு சொல்லிட்டேன்"

கவலைப்படும் அன்பர் 3

"சரி பார்க்கலாம்" , அவ்வப்போது தோன்றிய கவலைகளை ஒத்திப்போட்டு 3 மணி அடித்ததும் யோசித்து பார்த்து

"ஏதோ யோசித்து வைத்தோமே நினைவு வரலையே" என கவலைப்பட்டார்.

கவலைப்படும் அன்பர் 4(வடிவேலு ??!!)

"கொடுக்கிற அரைமணி நேரத்தில லொள்ளைப் பாரு. நான் கவலைப் படுறதையே நிறுத்திட்டேன்ப்பா...அப்பாடி நம்பிட்டாய்ங்க.."

கவலைப்படும் அன்பர் 5


"அய்யோ மூணு மணி வரை கவலைப் பட முடியாதே"

கவலைப்படும் அன்பர் 6

"அப்படியா மற்ற நேரத்துல ஜாலியா இருக்க வேண்டியது தான்"

உழைப்பாளி!!!

கவலைப்படும் அன்பர் 7

இவர் மாத்தி யோசி அன்பர் போலும்...

நிறுவனத்தில் ஊழியர்கள் கவலையில்லாம இருக்கனும்னு தான்

இந்த அறிவிப்பு செய்திருக்காங்க. சபாஷ்!

தொ. கா. வுக்கு ஒரு முற்றுப்புள்ளி

மடி கனிணியை

திறந்து வலை பார்க்க

ஆரம்பித்து

ஒரு மணி நேரம் ஆயிற்று...



தொ. கா வில் உன்

டோரா முடிந்து

டியோகோ வந்தாயிற்று...



போதும் கண்ணா

தொலைக்காட்சி பார்த்தது போதும்...



அன்று உன் சோர்ந்த

முகம் பார்த்து

போதும் அம்மா

எழுதியபின்...



ஒரு நாளில் உன் தொ. கா நேரம்

இனி ஒரு மணி நேரம் தான்...

முடிவான முடிவாயிற்று..



நீ போய் மடி கனிணியை

வைத்துக்கொண்டு

உட்கார்ந்திரு, என்னை விடு என

நீ சொல்ல ஆரம்பிக்குமுன்..

நான் சொல்கிறேன்...



வா வெளியில் சென்று

விளையாடலாம்...



காக்கை யை தேட முடியாது

கார் பார்த்துக்கொண்டே

சாப்பிடலாம்...



பூக்களையும், செடிகளையும்

ரசிக்கலாம்...



இதோ கையில்

உன் ஆசை தூரிகையை எடு

சுவர் முழுதும்

ஓவியம் தீட்டலாம்...



இன்னும் தண்ணீரில்

கூட விளையாடலாம்...



உனக்கான நேரம்

இன்னும் ஒரு வருடம் தான்

நீ பள்ளி செல்லும் வரை தான்



வா விளையாடலாம்

போதும் கண்ணா..

தொ. கா. வுக்கு இனி ஒரு முற்றுப்புள்ளி.

போதும் அம்மா...

போதும் அம்மா...


மடி கணினியை

மடியை விட்டு

தூக்கி எறி....


என்னை

வைத்துக்கொள்....


தொலைக்காட்சி

பேசியது போதும்

நீ பேசு என்னுடன்...


பொம்மைகளோடு என்

விளையாட்டு போதும்

நீ விளையாடு என்னுடன்...


வலை பதிந்தது போதும்

என் கன்னத்தில்

முத்தம் பதி...

போதும் அம்மா...

ஓவியம்

ஒவ்வொரு முறை


நான் பேனா

எடுக்கும் போதும்



ஆசையாய் வாங்கி

அம்மா ம்ம் ம்ம்



என் காகிதம் முழுக்க

உன் கிறுக்கல்கள்



காகிதமும் நிறைந்தது

ஓர் மிகச் சிறந்த

இரண்டு வயது

ஓவியனின்

முதல் முயற்சியால்



தயக்கமே இல்லாத

உன் கோடுகள்

வட்டங்கள்



படைப்பாளிக்கு

வானமே எல்லை

உனக்கும் தான்



கூரை மட்டும்

எட்டவில்லை

தப்பித்து விட்டது



சுவற்றில் ஒரு இடம்

மீதியில்லை



மெழுகு வண்ணங்களில்

பல புதிரோவியங்கள்



மேஜையும்,

நாற்காலியும்

ஆழ் நிற சோபாவும்

கூடத்தான்



மெருகேறி இருக்கின்றன

உன் வண்ணக்காய்ச்சலில்

குளித்து



வென்னிற தரையும்

உன் விளையட்டுத்திடல்



எத்தனை முறை

கடிந்து கொண்டாலும்

அழகாய்

பெருமையாய்

ஒரு புன்சிரிப்பு

உன் உதடுகளில்



காலையிலிருந்து

மாலைவரை

நீ தீட்டிய

ஓவியங்களோடு



மாலையிலிருந்து

மறு நாள் காலைவரை

உன் தந்தையின்

சாய விலை ஆதியாக

அடித்த நேரம்

(நல்ல வேளை

ஆள் வைத்து

சாயம் அடிக்க

வில்லை

கூலியும் சேர்ந்திருக்கும்)

அழகு

.....அந்தம் வரை



வரும் பாட்டுக்களையும்

ரசிக்கிறேன்



என் சின்னத் திருமகனின்

ஓவியத்திறமையை

மெச்சியபடி.....

வெற்றியின் விலாசம்

முயற்சி செய்வதும்


தோற்பதும்

ஏன் வெல்வதும் கூட

மிகச்சாதாரணம் தான்

அவை மற்றவர்களுக்கு

நிகழும்போது

முயற்சி செய்வதும்

தோற்பதும்

இடியாய் இறங்கும்

நமக்கு எனும் போது



நீ தனித்தீவில்லை

தோல்வியின் விளிம்பில்

திசை தடுமாறி நிற்க



இன்று வென்றவர்

கதை அநேகம்

அவர்கள் தழுவிய

தோல்விகள் ஏகம்



முயல்வதும்

வெல்லும் வரை



அயராது முயல்வதுமே



வெற்றிக்கு விலாசம்



உன்னைத் தயார் செய்

வெல்வதற்கு

மனதையும்

அறிவையும்

உடலையும்

ஆன்மாவையும்

தயார் செய்



தனி ஒரு செல்லாக இருந்து

கருவறையில் வளர்ந்து

பின் பிறந்து

ஒரே வருடத்தில்

குப்புற படுத்து

மண்டி போடு

கை ஊன்றி

கால் பதித்து

தட்டு தடுமாறி நடந்து

பின் நன்றாகவும் நடந்து

பேசவும் கற்றுக்கொண்டு …..



உனக்கா முயற்சியில்லை?



எழு மனந்தளராதே

இன்னும் கொஞ்ச தூரம் தான்

வெற்றியை நெருங்க



வெற்றி உனக்கே!

18 ஏப்ரல், 2010

வாழ்க்கை

வரவேண்டிய மாற்றம்
வந்தே தீரும்...

போக வேண்டிய நாளும்
வந்தே தீரும்...

நம்  நிறுத்தம் வந்தவுடன்
இறங்கி விடத்தான்
போகிறொம் என்றாலும்....

பேருந்தில்
சௌகர்யமான இடம்
பார்த்து அமர்கிறோமே...

இறங்கும் நேரம் வரை
வெளியில் வேடிக்கை
பார்த்து...
ரசித்து...
அடுத்து செய்யப்போகும்
வேலைகளை திட்டமிட்டபடி...

அது போலத்தான்
வாழ்க்கை...

16 ஏப்ரல், 2010

நித்து..

அம்மா, "ஏய்... "

நித்து, "எ"

அம்மா, "ஏய்.. "

நித்து "இம்ம்.. பி.. சி.."

அம்மா, "நித்தூ.... "

அருகில் வந்து இம்ம்?

அம்மா, " நித்திக்க்கூ..."

நித்து, ஒரு வசீகரப்புன்னகை

இப்போது அம்மா "சொல்லு ஏ, பி, சி"

 நித்து  "நோ".

14 ஏப்ரல், 2010

வருக தமிழ்ப் புத்தாண்டு...

இன்று முதல் 
நிறைய மாற்றங்கள்
வர வேண்டும்
உன் உருவில்

எல்லாமே
நன்றாய்
நலமாய்
வருவாய்
வருக வருக
தமிழ்ப் புத்தாண்டு.

12 ஏப்ரல், 2010

நினைவுகள்

மழை பெய்த
ஈர மண்ணின்
மணம்...

சாலையோர
பூக்களின்
வண்ணம்...

அலைகடல்
ஓரம் சூடான
சுண்டல்...

தெருவில் முழங்கும்
வியாபாரியின் குரல்...

மரங்களின் ஊடே
கசியும்
அந்த காலை
பதினொரு மணி வெயில்...

வாசலில் மார்கழி கோலம்
அம்மாவின் காபி...
தம்பியுடனான சீச்சீ சண்டை...

எப்போதும் கைகளில்
தவழும்
பாடப்புத்தகங்கள்...

தூரத்தில் கேட்கும்
பிடித்த பாடல்...

குயிலின் கானம்...

காந்தியின்
சத்திய சோதனை
விவேகானந்தர் சுயசரிதை
எல்லாம் நினைவில்
பசுமையாய்...

குழந்தைகளாகவே
இருந்திருக்கலாம்...
பொறுமையாகவே
வளர்ந்திருக்கலாம்...

7 ஏப்ரல், 2010

ஈசல்

கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். வழிபாடு முடித்து கோவில் சுற்றி வந்து உட்கார்ந்த இடத்தில் மின்விளக்கு வெளிச்சத்திற்கு சில பூச்சிகள் தரையில் வட்டமடித்த்துக் கொண்டிருந்தன. அதை என் மகன்  (7 வயது) பார்த்துக்கொண்டிருந்தான். திரும்பி வரும் போது வண்டியில் வழக்கம் போல் அவன் புதிதாய் தெரிந்துகொண்ட விஷயங்களை சொல்லிக்கொண்டு வந்தான்.

"அங்க பூச்சிக்கெல்லாம் ஒரே சண்டை டாடி, ஒரு எறும்புக்கும் ஈக்கும் பயங்கர சண்டை போலிருக்கு. ஒரு பெரிய குண்டு எறும்பு ஒண்ணு ஈ கிட்ட சண்டை போட்டு வின் பண்ணிட்டு போலிருக்கு, அதோட இறக்கையை பிச்சு பின்னாடி மாட்டிகிட்டு வேகமாக போச்சு டாடி". என்றான்.

"என்னடா சொல்ற புரியல" இது அவன் அப்பா.

"நிஜமா டாடி, நான் பார்த்தேன்"

"அவன் சொல்வது புரிந்ததால் அதற்கு சிரித்துக்கொண்டே விளக்கம் கொடுத்தேன். அவன் பார்த்தது ஈசல், ஈ யை எறும்பையும் மட்டுமே அதுவரை பார்த்திருந்ததால் அங்கு இருந்த ஈசலை தெரியவில்லை அவனுக்கு. ஈ பாவம் எறும்பு மோசம் என்று சொல்லிக்கொண்டிருந்தவன், அப்படியா ஒரு பூச்சி இருக்கு" என்றான்.

உடனே " அச்சொச்சோ இந்த மம்மி இதை  நாளைக்கு ப்ளாகுள போட்டுடுமே. ப்ளாகை கண்டு பிடிச்சதிலிருந்து இதே பிரச்சனை தான், மம்மிகிட்ட ஒன்னும் பேச முடியல" என்றான்.

3 ஏப்ரல், 2010

குழந்தை வெள்ளி இடுப்பு சங்கிலியில் செய்த சாமி மாலை

கண்ணாடி வேலைப்பாடு (என் தோழியின் கைவண்ணம்)

டிசைன் செய்த குழந்தைகள் சட்டை

எம்பிராய்டரி, வண்ணம் செய்த குட்டை பாவாடை

பூக்கள் வரைந்த சுடிதார்

சாயம், கற்கள் வேலை செய்த பை

மினு மினு அலங்காரம்

மணி மண்டபம் வேலைப்பாடு

தபால் பெட்டி