28 ஏப்ரல், 2011

எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம்

படிப்பதற்கு முன் ஒரு நிபந்தனை..
படிக்கும் போது உங்க மனசுல தோணுற சில வசனங்களும் அடைப்புகுறிக்குள்ள இருக்கும், அதெல்லாம் சரியான்னு கண்டிப்பா கருத்துரைல சொல்லனும்! இல்லன்னாலும் வேற என்ன தோணிச்சுன்னு சொல்லனும், சரியா? (அட கருத்துரை வாங்க இப்படி ஒரு புது ஐடியாவா? அவ்வ்...)


அம்மா எங்கள் டீச்சர் கொடுத்தாங்க, படிக்கிறாயா? என்று இரு மாத இதழ்களை நான் பார்த்துக்கொண்டிருந்த நாளிதழின் மேல் வைத்துவிட்டு வீட்டுப்பாடத்தில் மூழ்கினான் என் மகன். அதில் வேகமாக விழிகளை ஓட்ட முதலில் கவனத்தை ஈர்த்தது 3000 ஆண்டுகள் முன்பு இறந்து போன அரசன் டட்டின்  மம்மி பற்றிய செய்தி தான். முன்பு பார்த்து மறந்து போன மம்மி படங்களின் காட்சிகள்  நினைவுக்கு வர படித்ததில், அதிலிருந்த மூன்று பக்க விஷயம் நிறையவே யோசிக்க வைத்தது. இப்படித்தான் ஆரம்பித்தது எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம். எதையும் முழுதாக தெரிந்து கொண்டு விட எப்போதும் போல் பற்றிக்கொண்ட ஆர்வம் மேலும் சில தகவல்களை தேடவைத்தது. அதில் கிடைத்த சுவரஸ்ய சங்கதிகள் சில உங்களுக்காக....


முன்பு என் பள்ளிப்பருவத்தில் முதன் முதலாக  மம்மிகளையும், பிரமிடுகளையும் பற்றி என் அப்பா விவரித்து சொன்னார்,...
ஒரு அரசன் இறந்து போனால் அவனுடன் சேர்த்து ஒரு ராணுவத்தையே கொன்று பதப்படுத்தி பிரமிடுகளில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். அவை இன்னும் கெடாமல் இருக்கின்றன என்று. ஒரு காவலன் இறந்து விட்டால் அது போல அரசனை கொன்று வைப்பார்களா என்று  நான் கேட்டது நினைவிருக்கிறது. (என்ன மொக்கை லாஜிக்!!!) எல்லா உயிர்களும் சரி சமம் தான்னு அன்னைக்கு தாங்க என் ஆசிரியை பள்ளியில் சொல்லியிருந்தாங்க ஹ ஹ. (என்னா கொல வெறீ !!!???!!!)

டட்டின் மம்மி இருக்கும் பெட்டி
சரி இனி அரசன் டட்டன்கேமன் பற்றி சில தகவல்கள்:
  • டட் அமர்னா என்ற எகிப்த்திய நகரத்தில் வளர்ந்தான்.
  • அப்போதைய எகிப்த்து அரசனான அவன் தந்தை டட்டின் ஒன்பது வயதில் இறந்து விட்டதால் அப்போதே அரசனாகி விட்டான்.
  • இவ்வளவு சிறிய வயதில் அரசனான டட்டுக்கு நாட்டை ஆள பெரியவர்களின் உதவி தேவைப்பட்டது.
  • டட்டின் செருப்பின் உள் பக்கத்தில் அவனுடைய எதிரிகளின் படங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன. நடக்கும் போது மிதித்து கொல்வதாக நினைத்துக்கொள்வார்களாம்.
  • அவனுடைய மம்மி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு நூறு ஊன்று கோல்கள் இருந்தனவாம். இவை ஏன்?
  • டட்டுக்கு தானே நாட்டை ஆளும் வயது வந்த போது ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டான். ஏன்?

இவற்றுக்கு விடையும், மேலும் சில ஸ்வாரஸ்ய தகவல்களையும் அடுத்த இடுகையில் தருகிறேன். (பெரிய மெகா சீரியலு!! தொடரும் போட்டிருக்காங்க!! ஆனாலும் படிக்க  நல்லாத்தான் இருக்கு!!) இல்லன்னாவது எழுதி தானே ஆகனும். எப்புடி?

27 ஏப்ரல், 2011

மனதில் விழுந்த சாட்டையடி

சென்ற வாரம் மழையில்லாத ஒரு மாலையில் பிள்ளையை பூங்காவில் விளையாட விட்டு அமர்ந்திருந்தேன். எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடன் சென்று அதிலேயே மூழ்கி படித்துக் கொண்டிருந்துவிட்டு நேரம் முடிந்தவுடன் திரும்பி வந்து விடுவது உண்டு. அன்று கையில் புத்தகம் இல்லை. பேசுவதற்கும் யாரும் தென்படாததால், பார்வை அங்கிருந்த அனைவரின் மேலும் ஓட ஒரு சிறுமியின் செயல்கள் எனை ஈர்த்தது.

ஏறக்குறைய பத்து வயதிருக்கும் அவளுக்கு, தன் உயரம் இருந்த தன் சகோதரனை சுமந்து கொண்டு வந்தாள். கயிற்றில் கட்டப்பட்ட விளையாட்டு தீமின் ஒரு புறத்தில் அமரச் செய்து, ஒவ்வொரு அடியாக எங்கு வைக்க வேண்டும் என சொல்லித்தந்து அவன் தடுமாறி விழப்போன போதெல்லாம் தாங்கிப் பிடித்து, அவன் தயங்கிய போதெல்லாம் முடியும், முடியும் என் ஊக்கம் கொடுத்து, அவன் அதில் மறு முனைக்கு செல்லும் வரை பக்கத்திலேயே இருந்து பின் மறுபடியும் சுமந்து சென்றாள். ஒரு கனம் கூட அவள் முகம் சுளிக்கவில்லை. அவன் மனவளர்ச்சி குன்றிய சிறுவன். அந்தக் காட்சியை பார்த்ததும் என்னுள் என்னவோ மாற்றம்.

அந்த சிறுமிக்கு இந்த சிறிய வயதில் எவ்வளவு பொறுமை, மன முதிர்ச்சி, பாசம், அந்தக் கண்களில் தெரிந்த தாய்மை உணர்வு எல்லாம் சேர்நது என் மனதில் ஒரு சாட்டையடி விழுந்தது போலிருந்தது.

எவ்வளவு பெரிய பொக்கிஷமான வாழ்க்கையை ஒன்றுக்கும் பிரயோசனமில்லா விஷயங்களுக்காக வருந்தி வீணடிக்கிறோம் என்ற குற்ற உணர்வு மேலிட்டது. சிறுவயதில் தம்பியுடன் சண்டையிட்ட காலங்கள் கண்முன் தோன்றி அதை அதிகப்படுத்தியது. நன்றாகவே படிக்கும் பிள்ளையை, அவன் முயற்சியை பாராட்டாமல் முதல் மதிப்பெண் எடுக்கச்சொல்லி வருத்துவதிலிருந்து அனைத்தும் நினைவுக்கு வந்து கலவரப்படுத்தியது. என்ன செய்து கொண்டிருக்கிறோம், யாருக்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று எப்போதும் ஒப்பீடு செய்யும் மனதை சாட்டையடி வாங்கிய மனம் கேள்வி கேட்டது.

இனிமேல் பிள்ளைகளை அடிக்கவே கூடாது எனும் தீர்மானம் மனதில் நிறைவேறியது. இனியாவது இதை விடாமல் பின்பற்றுவேன் என்று நினைக்கிறேன்.

25 ஏப்ரல், 2011

மீண்டும் உனக்காகக் காத்திருக்கிறேன்...

என் பலவருடக்
காத்திருப்புக்குப் பின்
எனை அள்ளிக்கொண்டாய்...
என் நிறத்தில்
இன்னும் சிலவற்றையும்
சேர்த்துத்தான்..
சந்தோஷமாக
எங்கோ புறப்பட்டாய்...
அன்று இரண்டாம் முறையாக
உனக்கு உபயோகப்பட்டேன்..
அன்று முழுதும்
இன்பமாகவே இருந்தாய்...
என்னுடன் நீ மிகவும் அழகாக
இருப்பதாக எல்லோரும்
சொன்னார்கள்...
உன் முகத்தில் புன்னகை...
இரவுக்கு முன் நிழலில்
எனை உலர்த்தினாய்...
உன் வியர்வை என்னிலிருந்து
விடுபட்டுப்போக...
உலர்ந்தேன்...காய்ந்தேன்...
சற்று நேரத்தில் சூடு வாங்கி
பின் காத்திருக்கப்போகிறேன்...
அடுத்த அரை நூற்றாண்டில்
அதிக பட்சம் ஒரு முறை
உன் கண்கள் என் மீது
மறுபடியும் விழும்
என்ற நம்பிக்கையுடன்
நீ ஆசையாய்
எனை எடுத்து
மீண்டும் அழுக்காக்க...
என் போன்ற இன்னும் ஐந்தாறு
பட்டுப் புடவைகளுடன்...
உன் வீட்டு அலமாரியின்
ஆரவாரமில்லா மூலையில்
அலங்காரமாய்த் தொங்கியபடி
தங்கக்கரையுடன்
சிவப்பு நிறத்தில் நான்...

12 ஏப்ரல், 2011

அன்புடன் விஜயகாந்த்!

விஜயகாந்தின் அறிக்கைகளையும், நடவடிக்கைகளையும் கூட்டமா சேர்ந்து கும்மியடிச்சிகிட்டு இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தலைப்பா? என நீங்கள் யோசிப்பது தெரிகிறது. அரசியல் விஷயங்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்ங்க. அதெல்லாம் பெரியவங்க விஷயம்.
நான் எழுத நினைத்தது பிரபல தொலைக்காட்சிகளில் விஜயகாந்த் போல் நடித்து பேர் வாங்கி அசத்தி, கலக்கி சென்ற பலகுரல் மன்னர்களையும், காமெடி தீம் வின்னர்களையும் பற்றி. தொடர்ந்து சிரிப்பு நிகழ்ச்சிகளை பார்க்கிறவர்களுக்கு தெரிந்திருக்கும், எந்த தலைப்பா இருந்தாலும் அதில் விஜயகாந்த் பேசுவது போல் ஒரு காட்சி கண்டிப்பாக இருக்கும். இருக்க வேண்டும் என்பது கட்டாயமோ என்னவோ. அது இல்லாமல் போனால் நிகழ்ச்சியே ருசியில்லாமல் இருப்பது போல் பார்ப்பவருக்கும் பிரம்மை தோன்றும் அளவுக்கு விஜயகாந்தை ஆக்கிவிட்டனர். அடேயப்பா ஓட்டுவதற்கு தான் எத்தனை பேர் எத்தனை விதமான யோசனைகள். எல்லாம் சிரிக்க வைக்க.
இதே சிரிப்பு  நிகழ்ச்சிகளை யாரையும் புண்படுத்தாமல் செய்யவே முடியாதா என நிறைய யோசித்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
அதே நிகழ்ச்சியில் ஒருவர் விஜயகாந்த் போல் வேடமிட்டு வந்து நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?  நானில்லாம ஒரு தீம் பண்ணமுடியுமா உங்களால? என் பேர் இல்லாம ஒரு காமெடி சீக்வன்ஸ் சொல்லுங்க பார்ப்போம் என்கிறார். அதற்கும் சிரிக்கிறோம்.
இப்போது கதையே வேறு. வழக்கமாக  நகைச்சுவை நிகழ்ச்சிகளை தவறாமல் பார்க்கும்  நண்பர் ஒருவர் இப்போது பார்ப்பதேயில்லையாம். ஏனென்று கேட்டதற்கு, அதுக்கு தான் அரசியல் செய்திகள் இருக்கே, அதை விட இந்த காமெடி சுவாரஸ்யமா இருக்கு என்கிறார். ரொம்ப வருத்தமாக இருக்கிறது.


பின் குறிப்பு:
நான் விஜயகாந்த் கட்சி அல்ல.

11 ஏப்ரல், 2011

என் வழி தனீ... வழி!

மளிகையும், காய்கறியும் ஸ்டாக் தீர்ந்து விட்டதால், அந்த வாரயிறுதி  நாள் குடும்பத்துடன் முஸ்தஃபா போகலாம் என முடிவாயிற்று. சிங்கப்பூரிலேயே பெரிய இந்திய ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ். உள்ளே சென்றால் வெளியே வருவதற்குள் நடந்தே சோர்ந்து விடுவோமென்றாலும் அத்தனை பொருட்களையும் ஒரே கடையில் வாங்கலாம் என்பதால் வேறு எங்கும் செல்ல பிடிப்பதில்லை. பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கு போய் கோபப்படாமல் வருவது என்பது பெரிய விஷயம் தான். அங்கும் இங்கும் ஓடி கண்மறைய, போய் விளையாடி அவ்வப்போது பயமுறுத்தும் பிள்ளைகளை அடிக்காமல் திட்டாமல் அரவணைக்க இன்னும் முயற்சிக்கிறேன். 
அன்றும் என் சின்ன மகன் ஒரு ஷாக் கொடுத்தான். நல்ல வேளை கூட்டம் அவ்வளவாக இல்லாததால் ஷாக்கின் வாட்ஸ் மிதம். பக்கத்திலேயே விளையாடிக்கொண்டிருந்தவன் திடீரென்று காணவில்லை. கூப்பிட்ட குரலுக்கு பதிலில்லை என்றதும் பதறி தேட ஆரம்பிக்க மூன்று நிமிடங்களுக்கு பிறகு சாவகாசமாக ஏன் கத்துற என்ற பார்வையுடன் பெரிய மனிதனாட்டம் வந்து நின்ற அழகு இருக்கிறதே, எனக்கு அப்பாடா என்றிருந்தது. பட்ட டென்ஷனுக்கு "எங்கடா போய்ட்ட, கூப்பிட்டா ஏன்னு கேக்கமாட்டே, எங்கயாவது போய்ட்டா எப்படி வழி கண்டுபிடிச்சு இங்க வருவ?" என நான் படபடக்க,
 கொஞ்சமும் பதட்டமில்லாமல் அவன் சொல்லியது என்னை அதிசயிக்க வைத்தது அது "என் வழி தனீ வழி". பார்ப்பதெல்லாம் பே ப்லேடும், ஜெரோனிமோவும் என்றாலும், இந்த தமிழ் திரைப்பட வசனங்கள் எங்கிருந்து கற்கிறான் என்ற குழப்பம் இன்னும் இருக்கிறது. நர்சரி பள்ளியில் பயிலும் குழந்தை, எப்போதோ பார்த்த வசனங்களை நினைவில் வைத்திருப்பதும் ஆச்சரியம் தான்.

1 ஏப்ரல், 2011

மனசரோவரில் விடிந்த இன்றைய பொழுது




மிகுந்த களைப்பில்
தூங்கியிருந்தேன் நேற்றிரவு
மூடியிருந்த கண்களின் மேல்
மெல்லிய வெளிச்சம்
விடிந்து விட்டதா யோசனையுடன்

கண்களை திறக்க
யத்தனித்த வினாடி
முகத்தின் மேல் சிலு சிலு காற்று
சுற்றிலும் பனிபடர்ந்த குளுமை
விழித்து பார்த்தால்
சுற்றிலும் வெள்ளி நிறத்தில்
பனி மலைகள்
கிழக்கில் எட்டிப்பார்க்கும்
கதிரவன்
எழுந்து நடந்தேன்
பக்கத்தில் தெள்ளிய சுத்தமான
தண்ணீர் அல்ல ஏரி
எவ்வளவு சுத்தம் இந்த தண்ணீர்
இது எந்த இடம்
சிந்திக்கவேயில்லை மனம்
எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை
கொஞ்சமும் சந்தேகமில்லாமல்
அந்த இடத்தின் புதுமையை
முழுதாக அள்ளிப்பருகிய வேளை
பறவைகளின் சத்தம்
ரம்மியமாக காதின் ஓரம்
இந்த இடத்தில்
பறவைகளின் சத்தம்
எப்படி?
இமய மலையில்
கைலாசத்திற்கு அருகிலிருக்கும்
மனசரோவர் ஏரியல்லவா இது.
மறுபடியும் கண்விழிக்க
வெப்ப மிகுதியால் காலையில்
ஆன் செய்த ஏஸி
முகத்தில் சிலு சிலுக்க
நேற்றிரவு வைத்த அலார்ம்
பறவைகள் ஓலியுடன்
காதில் விழ
சற்று முன் கண்டது கனவு என்று
நம்ப முடியாத பிரம்மிப்பில்
இன்னும் நான்.