3 நவம்பர், 2011

மறந்து போன தமிழ் தட்டச்சு

மிக நீண்ட காலமாய் திறக்கப்படாத தமிழ்ச்சோலைக்குள் இப்போது சும்மா போவோமே என்று பார்த்தால் அட நாமா இவ்வளவு வளவள என எழுதி தொலைத்திருக்கிறோம் என ஆச்சர்ய படும்படி பழைய இடுகைகள் எல்லாம் யாரோ எழுதியது போல் அன்னியபட்டு நிற்கின்றன. அஹா மறுபடியும் எழுதியே ஆகவேண்டும் என்ற தோன்ற தமிழில் தட்டச்ச தாறுமாறாக போகிறது வார்த்தைகள். இதுவரை எழுதாததால் இணையத்தில் என் பங்குக்கு சில குப்பைகளை சேர்க்காமல் இருந்த திருப்தியை இப்போது இழக்கப்போகிறேன். சரி. இன்னும் 1 எம் பி சேர்வதால் இணையம் கனமாகிவிடாது என்ற எண்ணத்தில் தொடர்கிறேன். வெட்டித்தனமாக இல்லாமல் எதையாவது செய்தே ஆக வேண்டும் என்று செய்த நேரம் போய், இன்னும் கொஞ்சம் நேரம் அதிகமாக கிடைக்காதா என்றாகிவிட்டது வாழ்க்கை. மனதின் பழைய நிறைவின்மை கொஞ்ச காலம் புதிய சவாலான வேலைக்குள் ஒளிந்திருந்தது போலும்... இப்போது மெல்ல மீண்டும் தலை காட்ட ஆரம்பித்து விட்டது. வேலை செய்யாமல் வீட்டிலிருப்பது தான் நிறைவின்மை தருகிறது என்ற தப்பான எண்ணம் இப்போது இல்லை. ஆனால் எதை கொட்டி நிறைப்பது என்பது பெரிய கேள்வியாய் இருக்கிறது. கேள்வியே தெளிவாக இல்லாதபோது பதில் எப்படி கிடைக்கும்? இது இப்படித்தான் வெகுகாலமாய் என்னை குடைகிறது. சரி எதில், எப்பொது பதில் வருமென விழித்திருக்கிறேன்.

30 ஜூன், 2011

இங்கா...



இங்கா...

இதோ எங்கோ ஒரு அசௌகர்யம்
ஆரம்பமாகி விட்டது
இப்போது நெளிய ஆரம்பிக்க வேண்டும்
மேலே அதென்ன ஒரு முகத்தையும்
காணவில்லை
சரி கொஞ்சமாக கத்திப்பார்ப்போம்
வந்து விடுவாள்
"இங்கூ... இங்கூ..."

தலையை திருப்பி திருப்பி பார்த்தும்
ஒன்றும் தெரியவில்லை
இம்ஹூம் வருவதாக தெரியவில்லை
அதற்குள் ரொம்ப வயிற்றை என்னமோ செய்கிறதே
சரி வேறு வழியில்லை வேகமாக கத்த...
உர்ரே...உர்ரே.....இம்ம்ம்...ம்மா...
இங்கா....இங்கா....இங்கா...

அட பதறியதித்து வருபவள்
அவளே தான் என் தேவதை, அம்மா

அச்சச்சோ பிள்ளைக்கு பசிக்குதா?
இதோ அம்மா வந்துட்டேன்
அழாத செல்லம் என்று
இன்னும் என்னென்னவோ சொல்லி
தூக்கி கொஞ்சினாள்
பாலை வாயில் கொடுப்பதாய் தெரியவில்லை

இரு தங்கம் பாட்டி இங்கா ஆத்துறாங்க
இப்போ சாப்பிடலாம்
என்றபடி தூக்கி தோளில் சாய்த்துக்கொண்டாள்
இப்போ கொஞ்சம் அதென்ன? பசி... பரவாயில்லை
அட திரும்பவும் என்ன
இனி முடியாது
மீண்டும் கத்த வேண்டும் போலிருக்கு
அப்போதான் தருவாங்க
ஆ...இங்கா...இங்கா...

அப்போது பால் புட்டியின்
முனை வாயில் செருகப்பட
அப்பாடி ஒரு வழியா கொடுத்.....
முடக் முடக் என்று குடித்த வேகத்தில்
எல்லாம் மறந்து போயிற்று

அட குடித்து முடித்து விட்டேன்
இன்னும் இந்த அம்மா
புட்டியை எடுக்க மாட்டேங்குறாளே?
திரும்ப முயற்சி செய்த போது
இன்னொரு கை தலையை
நகர விடாதபடி பிடித்தது

வாயையும் வெளியில் எடுக்க முடியல
தலையையும் திருப்ப முடியல
ஆனா நான் குடிச்சிட்டேனான்னு
கூட பாக்க மாட்டேங்குறா...
என்ன அம்மா இவ?
சரி இப்படியே இன்னும்
எவ்வளவு நேரம் இருக்கனுமோ?

குழந்தை குடிச்சுட்டன் பாரு
தூக்கி தோளில் போட்டுத்தட்டு
ஏப்பம் விடட்டும்
என்ற அந்த குரல்
நல்ல வேளை சீக்கிரமே வந்தது.

அடாடா குடிச்சிட்டியா
சரி என்றபடி ஏப்பம் விட வைத்தாள்
பின் மீண்டும் கொஞ்சி விட்டு
படுக்கையில் போட்டு விட்டாள்
துணியை மாற்றி துடைத்துவிட்டு

மாவு அடிக்கும் போது
கொஞ்சம் வாசம் வந்தது
நல்ல நெடி மூக்கில் ஏறிவிட சச்சு இதென்ன?
அய்யோ பிள்ளை தும்முறான் சளி இருக்குமோ?
எதையோ எடுத்து தலையிலும் நெஞ்சிலும் தடவ
இது என்ன வேறு வாசத்துடன் ஜில்லுன்னு இருக்கே
கொலோன் தடவினா சளி சரியாகிடுமாம் தங்கத்துக்கு
சொல்லிக்கொண்டே தேய்த்தாள்
சளி இருந்தாத்தானே?

பவுடர் மூக்கில் ஏறி தும்மினேன்னு இவளுக்கு ஏன் புரியல
மக்கு அம்மா
இன்னும் என்ன செய்யிறா?
இந்த வெயில்ல கைக்கும் காலுக்கும் உறை போடுறாளே
இனிமே குளிறாது நல்லா தூங்குங்க சரியா?
மறுபடியும் முத்தம்

மடியில் கிடத்தி...
ஏன் இப்படி தட்டுகிறாள்?
நானே தூங்குவேனே...
இது என்ன கண்ணை மூடி இழுக்குதே
சரி இம்ம்..தூங்குவோம்....

ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் இங்கா...

23 மே, 2011

எதிர்பாரா வாழ்த்து

எதிர்பாரா வாழ்த்து




--------------------------------------------------------------------------------



அன்று என் பிறந்த நாள். காலை கண்விழித்தவுடன் கணவரின் வாழ்த்து. வழக்கம் போல் சமையலை ஆரம்பித்து அதில் என்னை மறந்தேன். என் பெரிய மகன் விழித்தெழுந்தான். அறையை விட்டு வெளியே வந்தவுடன், வாழ்த்து சொல்வான் என எதிர் பார்த்தேன். சொல்லவில்லை. சரி மறந்திருப்பானோ என விட்டு விட்டேன். சற்று நேரத்தில் இன்று உங்க அம்மாவுக்கு பிறந்த நாள் தெரியுமா? என்ற அவன் தந்தையின் கேள்விக்கு மேல் கீழாகத் தலையசைத்தான். அப்போதும் கூட வாழ்த்து சொல்லவில்லை. நான் சும்மா இல்லாமல் இனி அவன் பிறந்த நாளுக்கும் இப்படியே செய்வோம் என்று சொன்னேன். பாவம் அவன் முகம் வாடிவிட்டது. அதற்கு கூட அவன் பதில் பேசவில்லை. அப்புறமும் விடாமல் "ஏண்டா தம்பி அம்மா மேல கோபமா? என்றேன்". "இல்லம்மா உனக்கு ஆட்டோமேட்டிக்கா வாழ்த்து வரும்" என்றபடி பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நடந்து கொள்வது முதல் முறையாக புதிராக இருந்தது. என்னவோ சரி என விட்டு விட்டு வேலை மும்முரத்தில் பிறந்த நாளை மறந்தும் போனேன். பின் சின்ன மகனை பள்ளியில் விட்டு கோவிலுக்கு சென்று வந்து மற்ற வேலைகளை பார்த்தேன். சின்ன பிள்ளை பள்ளி விடும் நேரமானது. அழைத்து வருவதற்காக கிளம்பி சென்று மின் தூக்கிக்காக காத்திருந்த போது என் பாக்கெட்டிலிருந்து வித்தியாசமான இசை கேட்கவே திடுக்கிட்டேன். அட கைத்தொலைபேசி ரிங்க் டோன் மாறி விட்டதா? இல்லையே சற்று முன் கூட ஒரு கால் வந்ததே அதற்கு வாய்ப்பே இல்லையே எனக்குழம்பியபடி, வெளியில் எடுத்து பார்த்தால், ஹேப்பி பர்த்டே என மின்னிய படியே இசை பாடியது. சரியாக நான் பிறந்த நேரத்தில் வாழ்த்து வரும்படி செட் செய்திருக்கிறான். சின்னவனாக இருக்க வாய்ப்பில்லை. எம்டி மெசேஜ் அனுப்பவும், கேம் விளையாடவும் மட்டுமே அவனுக்கு தெரியும். அவங்க அப்பாவுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. பெரியவன் தான். இரு நாட்களுக்கு முன் நீ பிறந்த நேரம் பகலா, இரவா? எத்தனை மணிக்கு பிறந்தே என்றெல்லாம் துளைத்தது இதற்கு தானோ என்றெண்ணிய போதே என் கண்களில் நீர் வழிந்தது. இந்த பிள்ளையை எவ்வளவு வருத்தப்படுத்துகிறோம் என்று தோன்றியது. அன்று அவன் பள்ளி விட்டு வந்தவுடன் மிகச் சாதாரணமாக "என்ன வாழ்த்து வந்ததா?" என்றான். "ரொம்ப தாங்க்ஸ் டா", என்ற போது. "உனக்கு சர்ப்ரைஸா இருக்கனும்னு தான் சொல்லலை" என்றான்.

10 மே, 2011

எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம் - 2

சென்ற இடுகையில் இருந்த கேள்விகளுக்கு விடை...

அவனுடைய மம்மி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு நூறு ஊன்று கோல்கள் இருந்தனவாம். இவை ஏன்?


டட்டுக்கு எலும்பு சுலபமாக முறியும் ஒரு வியாதி இருந்திருக்கிறது. அதனால் அவன் ஊன்று கோலின் துணையுடன் நடந்திருக்கிறான்.


டட்டுக்கு தானே நாட்டை ஆளும் வயது வந்த போது ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டான். ஏன்?

அந்த மம்மியை பரிசோதனை செய்தபோது, மலேரியா கிருமிகளின்
பாதிப்பு தெரிய வந்துள்ளது. அந்த காலத்தில் மலேரியாவிற்கு மருந்து இல்லை என்பதால் இறந்திருக்கிறான்.


டட் பற்றி இன்னும் சில செய்திகள் அறிய இங்கு கிளிக்குங்கள்: முதல் பாகம்

28 ஏப்ரல், 2011

எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம்

படிப்பதற்கு முன் ஒரு நிபந்தனை..
படிக்கும் போது உங்க மனசுல தோணுற சில வசனங்களும் அடைப்புகுறிக்குள்ள இருக்கும், அதெல்லாம் சரியான்னு கண்டிப்பா கருத்துரைல சொல்லனும்! இல்லன்னாலும் வேற என்ன தோணிச்சுன்னு சொல்லனும், சரியா? (அட கருத்துரை வாங்க இப்படி ஒரு புது ஐடியாவா? அவ்வ்...)


அம்மா எங்கள் டீச்சர் கொடுத்தாங்க, படிக்கிறாயா? என்று இரு மாத இதழ்களை நான் பார்த்துக்கொண்டிருந்த நாளிதழின் மேல் வைத்துவிட்டு வீட்டுப்பாடத்தில் மூழ்கினான் என் மகன். அதில் வேகமாக விழிகளை ஓட்ட முதலில் கவனத்தை ஈர்த்தது 3000 ஆண்டுகள் முன்பு இறந்து போன அரசன் டட்டின்  மம்மி பற்றிய செய்தி தான். முன்பு பார்த்து மறந்து போன மம்மி படங்களின் காட்சிகள்  நினைவுக்கு வர படித்ததில், அதிலிருந்த மூன்று பக்க விஷயம் நிறையவே யோசிக்க வைத்தது. இப்படித்தான் ஆரம்பித்தது எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம். எதையும் முழுதாக தெரிந்து கொண்டு விட எப்போதும் போல் பற்றிக்கொண்ட ஆர்வம் மேலும் சில தகவல்களை தேடவைத்தது. அதில் கிடைத்த சுவரஸ்ய சங்கதிகள் சில உங்களுக்காக....


முன்பு என் பள்ளிப்பருவத்தில் முதன் முதலாக  மம்மிகளையும், பிரமிடுகளையும் பற்றி என் அப்பா விவரித்து சொன்னார்,...
ஒரு அரசன் இறந்து போனால் அவனுடன் சேர்த்து ஒரு ராணுவத்தையே கொன்று பதப்படுத்தி பிரமிடுகளில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். அவை இன்னும் கெடாமல் இருக்கின்றன என்று. ஒரு காவலன் இறந்து விட்டால் அது போல அரசனை கொன்று வைப்பார்களா என்று  நான் கேட்டது நினைவிருக்கிறது. (என்ன மொக்கை லாஜிக்!!!) எல்லா உயிர்களும் சரி சமம் தான்னு அன்னைக்கு தாங்க என் ஆசிரியை பள்ளியில் சொல்லியிருந்தாங்க ஹ ஹ. (என்னா கொல வெறீ !!!???!!!)

டட்டின் மம்மி இருக்கும் பெட்டி
சரி இனி அரசன் டட்டன்கேமன் பற்றி சில தகவல்கள்:
  • டட் அமர்னா என்ற எகிப்த்திய நகரத்தில் வளர்ந்தான்.
  • அப்போதைய எகிப்த்து அரசனான அவன் தந்தை டட்டின் ஒன்பது வயதில் இறந்து விட்டதால் அப்போதே அரசனாகி விட்டான்.
  • இவ்வளவு சிறிய வயதில் அரசனான டட்டுக்கு நாட்டை ஆள பெரியவர்களின் உதவி தேவைப்பட்டது.
  • டட்டின் செருப்பின் உள் பக்கத்தில் அவனுடைய எதிரிகளின் படங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன. நடக்கும் போது மிதித்து கொல்வதாக நினைத்துக்கொள்வார்களாம்.
  • அவனுடைய மம்மி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு நூறு ஊன்று கோல்கள் இருந்தனவாம். இவை ஏன்?
  • டட்டுக்கு தானே நாட்டை ஆளும் வயது வந்த போது ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டான். ஏன்?

இவற்றுக்கு விடையும், மேலும் சில ஸ்வாரஸ்ய தகவல்களையும் அடுத்த இடுகையில் தருகிறேன். (பெரிய மெகா சீரியலு!! தொடரும் போட்டிருக்காங்க!! ஆனாலும் படிக்க  நல்லாத்தான் இருக்கு!!) இல்லன்னாவது எழுதி தானே ஆகனும். எப்புடி?

27 ஏப்ரல், 2011

மனதில் விழுந்த சாட்டையடி

சென்ற வாரம் மழையில்லாத ஒரு மாலையில் பிள்ளையை பூங்காவில் விளையாட விட்டு அமர்ந்திருந்தேன். எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடன் சென்று அதிலேயே மூழ்கி படித்துக் கொண்டிருந்துவிட்டு நேரம் முடிந்தவுடன் திரும்பி வந்து விடுவது உண்டு. அன்று கையில் புத்தகம் இல்லை. பேசுவதற்கும் யாரும் தென்படாததால், பார்வை அங்கிருந்த அனைவரின் மேலும் ஓட ஒரு சிறுமியின் செயல்கள் எனை ஈர்த்தது.

ஏறக்குறைய பத்து வயதிருக்கும் அவளுக்கு, தன் உயரம் இருந்த தன் சகோதரனை சுமந்து கொண்டு வந்தாள். கயிற்றில் கட்டப்பட்ட விளையாட்டு தீமின் ஒரு புறத்தில் அமரச் செய்து, ஒவ்வொரு அடியாக எங்கு வைக்க வேண்டும் என சொல்லித்தந்து அவன் தடுமாறி விழப்போன போதெல்லாம் தாங்கிப் பிடித்து, அவன் தயங்கிய போதெல்லாம் முடியும், முடியும் என் ஊக்கம் கொடுத்து, அவன் அதில் மறு முனைக்கு செல்லும் வரை பக்கத்திலேயே இருந்து பின் மறுபடியும் சுமந்து சென்றாள். ஒரு கனம் கூட அவள் முகம் சுளிக்கவில்லை. அவன் மனவளர்ச்சி குன்றிய சிறுவன். அந்தக் காட்சியை பார்த்ததும் என்னுள் என்னவோ மாற்றம்.

அந்த சிறுமிக்கு இந்த சிறிய வயதில் எவ்வளவு பொறுமை, மன முதிர்ச்சி, பாசம், அந்தக் கண்களில் தெரிந்த தாய்மை உணர்வு எல்லாம் சேர்நது என் மனதில் ஒரு சாட்டையடி விழுந்தது போலிருந்தது.

எவ்வளவு பெரிய பொக்கிஷமான வாழ்க்கையை ஒன்றுக்கும் பிரயோசனமில்லா விஷயங்களுக்காக வருந்தி வீணடிக்கிறோம் என்ற குற்ற உணர்வு மேலிட்டது. சிறுவயதில் தம்பியுடன் சண்டையிட்ட காலங்கள் கண்முன் தோன்றி அதை அதிகப்படுத்தியது. நன்றாகவே படிக்கும் பிள்ளையை, அவன் முயற்சியை பாராட்டாமல் முதல் மதிப்பெண் எடுக்கச்சொல்லி வருத்துவதிலிருந்து அனைத்தும் நினைவுக்கு வந்து கலவரப்படுத்தியது. என்ன செய்து கொண்டிருக்கிறோம், யாருக்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று எப்போதும் ஒப்பீடு செய்யும் மனதை சாட்டையடி வாங்கிய மனம் கேள்வி கேட்டது.

இனிமேல் பிள்ளைகளை அடிக்கவே கூடாது எனும் தீர்மானம் மனதில் நிறைவேறியது. இனியாவது இதை விடாமல் பின்பற்றுவேன் என்று நினைக்கிறேன்.

25 ஏப்ரல், 2011

மீண்டும் உனக்காகக் காத்திருக்கிறேன்...

என் பலவருடக்
காத்திருப்புக்குப் பின்
எனை அள்ளிக்கொண்டாய்...
என் நிறத்தில்
இன்னும் சிலவற்றையும்
சேர்த்துத்தான்..
சந்தோஷமாக
எங்கோ புறப்பட்டாய்...
அன்று இரண்டாம் முறையாக
உனக்கு உபயோகப்பட்டேன்..
அன்று முழுதும்
இன்பமாகவே இருந்தாய்...
என்னுடன் நீ மிகவும் அழகாக
இருப்பதாக எல்லோரும்
சொன்னார்கள்...
உன் முகத்தில் புன்னகை...
இரவுக்கு முன் நிழலில்
எனை உலர்த்தினாய்...
உன் வியர்வை என்னிலிருந்து
விடுபட்டுப்போக...
உலர்ந்தேன்...காய்ந்தேன்...
சற்று நேரத்தில் சூடு வாங்கி
பின் காத்திருக்கப்போகிறேன்...
அடுத்த அரை நூற்றாண்டில்
அதிக பட்சம் ஒரு முறை
உன் கண்கள் என் மீது
மறுபடியும் விழும்
என்ற நம்பிக்கையுடன்
நீ ஆசையாய்
எனை எடுத்து
மீண்டும் அழுக்காக்க...
என் போன்ற இன்னும் ஐந்தாறு
பட்டுப் புடவைகளுடன்...
உன் வீட்டு அலமாரியின்
ஆரவாரமில்லா மூலையில்
அலங்காரமாய்த் தொங்கியபடி
தங்கக்கரையுடன்
சிவப்பு நிறத்தில் நான்...

12 ஏப்ரல், 2011

அன்புடன் விஜயகாந்த்!

விஜயகாந்தின் அறிக்கைகளையும், நடவடிக்கைகளையும் கூட்டமா சேர்ந்து கும்மியடிச்சிகிட்டு இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தலைப்பா? என நீங்கள் யோசிப்பது தெரிகிறது. அரசியல் விஷயங்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்ங்க. அதெல்லாம் பெரியவங்க விஷயம்.
நான் எழுத நினைத்தது பிரபல தொலைக்காட்சிகளில் விஜயகாந்த் போல் நடித்து பேர் வாங்கி அசத்தி, கலக்கி சென்ற பலகுரல் மன்னர்களையும், காமெடி தீம் வின்னர்களையும் பற்றி. தொடர்ந்து சிரிப்பு நிகழ்ச்சிகளை பார்க்கிறவர்களுக்கு தெரிந்திருக்கும், எந்த தலைப்பா இருந்தாலும் அதில் விஜயகாந்த் பேசுவது போல் ஒரு காட்சி கண்டிப்பாக இருக்கும். இருக்க வேண்டும் என்பது கட்டாயமோ என்னவோ. அது இல்லாமல் போனால் நிகழ்ச்சியே ருசியில்லாமல் இருப்பது போல் பார்ப்பவருக்கும் பிரம்மை தோன்றும் அளவுக்கு விஜயகாந்தை ஆக்கிவிட்டனர். அடேயப்பா ஓட்டுவதற்கு தான் எத்தனை பேர் எத்தனை விதமான யோசனைகள். எல்லாம் சிரிக்க வைக்க.
இதே சிரிப்பு  நிகழ்ச்சிகளை யாரையும் புண்படுத்தாமல் செய்யவே முடியாதா என நிறைய யோசித்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
அதே நிகழ்ச்சியில் ஒருவர் விஜயகாந்த் போல் வேடமிட்டு வந்து நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?  நானில்லாம ஒரு தீம் பண்ணமுடியுமா உங்களால? என் பேர் இல்லாம ஒரு காமெடி சீக்வன்ஸ் சொல்லுங்க பார்ப்போம் என்கிறார். அதற்கும் சிரிக்கிறோம்.
இப்போது கதையே வேறு. வழக்கமாக  நகைச்சுவை நிகழ்ச்சிகளை தவறாமல் பார்க்கும்  நண்பர் ஒருவர் இப்போது பார்ப்பதேயில்லையாம். ஏனென்று கேட்டதற்கு, அதுக்கு தான் அரசியல் செய்திகள் இருக்கே, அதை விட இந்த காமெடி சுவாரஸ்யமா இருக்கு என்கிறார். ரொம்ப வருத்தமாக இருக்கிறது.


பின் குறிப்பு:
நான் விஜயகாந்த் கட்சி அல்ல.

11 ஏப்ரல், 2011

என் வழி தனீ... வழி!

மளிகையும், காய்கறியும் ஸ்டாக் தீர்ந்து விட்டதால், அந்த வாரயிறுதி  நாள் குடும்பத்துடன் முஸ்தஃபா போகலாம் என முடிவாயிற்று. சிங்கப்பூரிலேயே பெரிய இந்திய ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ். உள்ளே சென்றால் வெளியே வருவதற்குள் நடந்தே சோர்ந்து விடுவோமென்றாலும் அத்தனை பொருட்களையும் ஒரே கடையில் வாங்கலாம் என்பதால் வேறு எங்கும் செல்ல பிடிப்பதில்லை. பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கு போய் கோபப்படாமல் வருவது என்பது பெரிய விஷயம் தான். அங்கும் இங்கும் ஓடி கண்மறைய, போய் விளையாடி அவ்வப்போது பயமுறுத்தும் பிள்ளைகளை அடிக்காமல் திட்டாமல் அரவணைக்க இன்னும் முயற்சிக்கிறேன். 
அன்றும் என் சின்ன மகன் ஒரு ஷாக் கொடுத்தான். நல்ல வேளை கூட்டம் அவ்வளவாக இல்லாததால் ஷாக்கின் வாட்ஸ் மிதம். பக்கத்திலேயே விளையாடிக்கொண்டிருந்தவன் திடீரென்று காணவில்லை. கூப்பிட்ட குரலுக்கு பதிலில்லை என்றதும் பதறி தேட ஆரம்பிக்க மூன்று நிமிடங்களுக்கு பிறகு சாவகாசமாக ஏன் கத்துற என்ற பார்வையுடன் பெரிய மனிதனாட்டம் வந்து நின்ற அழகு இருக்கிறதே, எனக்கு அப்பாடா என்றிருந்தது. பட்ட டென்ஷனுக்கு "எங்கடா போய்ட்ட, கூப்பிட்டா ஏன்னு கேக்கமாட்டே, எங்கயாவது போய்ட்டா எப்படி வழி கண்டுபிடிச்சு இங்க வருவ?" என நான் படபடக்க,
 கொஞ்சமும் பதட்டமில்லாமல் அவன் சொல்லியது என்னை அதிசயிக்க வைத்தது அது "என் வழி தனீ வழி". பார்ப்பதெல்லாம் பே ப்லேடும், ஜெரோனிமோவும் என்றாலும், இந்த தமிழ் திரைப்பட வசனங்கள் எங்கிருந்து கற்கிறான் என்ற குழப்பம் இன்னும் இருக்கிறது. நர்சரி பள்ளியில் பயிலும் குழந்தை, எப்போதோ பார்த்த வசனங்களை நினைவில் வைத்திருப்பதும் ஆச்சரியம் தான்.

1 ஏப்ரல், 2011

மனசரோவரில் விடிந்த இன்றைய பொழுது




மிகுந்த களைப்பில்
தூங்கியிருந்தேன் நேற்றிரவு
மூடியிருந்த கண்களின் மேல்
மெல்லிய வெளிச்சம்
விடிந்து விட்டதா யோசனையுடன்

கண்களை திறக்க
யத்தனித்த வினாடி
முகத்தின் மேல் சிலு சிலு காற்று
சுற்றிலும் பனிபடர்ந்த குளுமை
விழித்து பார்த்தால்
சுற்றிலும் வெள்ளி நிறத்தில்
பனி மலைகள்
கிழக்கில் எட்டிப்பார்க்கும்
கதிரவன்
எழுந்து நடந்தேன்
பக்கத்தில் தெள்ளிய சுத்தமான
தண்ணீர் அல்ல ஏரி
எவ்வளவு சுத்தம் இந்த தண்ணீர்
இது எந்த இடம்
சிந்திக்கவேயில்லை மனம்
எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை
கொஞ்சமும் சந்தேகமில்லாமல்
அந்த இடத்தின் புதுமையை
முழுதாக அள்ளிப்பருகிய வேளை
பறவைகளின் சத்தம்
ரம்மியமாக காதின் ஓரம்
இந்த இடத்தில்
பறவைகளின் சத்தம்
எப்படி?
இமய மலையில்
கைலாசத்திற்கு அருகிலிருக்கும்
மனசரோவர் ஏரியல்லவா இது.
மறுபடியும் கண்விழிக்க
வெப்ப மிகுதியால் காலையில்
ஆன் செய்த ஏஸி
முகத்தில் சிலு சிலுக்க
நேற்றிரவு வைத்த அலார்ம்
பறவைகள் ஓலியுடன்
காதில் விழ
சற்று முன் கண்டது கனவு என்று
நம்ப முடியாத பிரம்மிப்பில்
இன்னும் நான். 

19 மார்ச், 2011

டிஷ்யும்...டிஷ்யும்..சண்டை....

வயலருகே சாலையில் இருவர் ரத்தம் வழிய மோதி மிதித்துக் கொண்டிருந்தததை பார்த்த நண்பர் ஒருவர் விசனத்துடன், "என்னடா விஷயம், ஏண்டா இப்படி அடிச்சிக்குறிங்க? என்றார்.
சண்டையிட்டவர் 1, "அட நீங்க வேற, இவன் மாட்டை விட்டு என் வயலில் மேய்ப்பானாம். அதான் நாலு சாத்து சாத்தினேன்."
நண்பர், "நீ ஏண்டா அப்படிச்சொன்னே?"
சண்டையிட்டவர் 2 "அதில்ல அவன் என் வயலுக்கு தண்ணி தர மாட்டேன்னு சொன்னான். அதான்."
நண்பர், "நீ ஏண்டா அப்படி சொன்னே? சரி, இதுல எது உன் வயல்?"
சண்டையிட்டவர் 1,"அதுதான், ஆனா வண்டி ஓட்டி சம்பாதிச்சு இனிமேதான் வாங்கனும்."
நண்பர், "சரி, உன் வண்டி எங்க?"
சண்டையிட்டவர் 1,"அதுவா வேலையில் சம்பாதிச்சு இனி தான் வாங்கனும்"
நண்பர்,"என்ன வேலைக்கு போற?"
சண்டையிட்டவர், "அதுவா, இனிமேதான் தேடனும்."
நண்பர் யோசனையுடன் மற்றவரைப் பார்த்து, "சரி உன் மாடுங்க எங்க?"
சண்டையிட்டவர் 2, "அதுங்களா, இனிமேல் தான் வாங்கனும்."
நண்பர்  (நீங்கள் வடிவேலுவை கற்பனை செய்துகொள்ளலாம்), "ஒன்னுமே இல்லாதத்துக்காடா இப்படி அடிச்சிகிறிங்க? ஏண்டா?, ஏன்?, போய் பிழைப்பை பாருங்கடா." தலையில் அடித்தபடி நகர்கிறார்.
இது சின்ன வயதில் தேவையில்லாமல்  நானும் என் தம்பியும் சண்டைபிடித்த நேரங்களில் எங்கள் அப்பா சொல்லும் குறுங்கதைகளில் ஒன்று.

தெளிவுற சிந்திக்க கற்றுத் தந்தமைக்கு நன்றி அப்பா!

18 மார்ச், 2011

நடை பயணம்

காற்று இறங்கிய
வாகனம்
தொலைதூர நடைபயணம்
தொடர்ந்து காடுகள்
மலைகள்
இரவுப்பொழுது
இருபுறமும் வானுயர்ந்த
மரங்கள்
சாலைகளோ மேட்டிலிருந்து
பள்ளத்திற்கு
உருளும் பக்குவத்தில்
அரைமணிக்கொரு முறை
கடக்கும் வண்டிகள்
இருள் சூழ்ந்த அந்த
முன்னிரவில்
அன்னிய நாட்டில்
அவளுக்காக
பதறிய படி அவன்
தினமும்
சமையலில் குறை
சொல்லும் கணவனின்
அன்பு
புரிந்து கொள்ள வைத்த
பழுதான வாகனம்
நன்றி கூறியபடி அவள்

பூச்சாடி வேலைப்பாடு





15 மார்ச், 2011

உயிருள்ள கவிதை..

மடிக்கணினி ஒளிர்ந்தபடி
என் மெத்தையின் விளிம்பில்...

அந்த ஒளியே
தட்டச்ச போதுமானதாய்...

காதில் மாட்டிய எம்பிதிரியில்
மெலிதாக நறுமுகையே
அதைத்தொடர்ந்து
எங்கேயோ பார்த்தமயக்கம்...

மனதின் ஏதோ ஓர்
நினைவடுக்கில்
கவிதை உயிர்
பெற்றுகொண்டிருக்க...

கண்களும் கைகளும்
வேகமாக விளையாட...

அர்த்தமில்லா எழுத்துக்களும்
சொற்களும் திரையில்
தோன்றித் தோன்றி
மறைய...

எண்ணங்கள் முழுவதும்
என்னவளைச் சுற்றியேசுழல...

உன்  ரசனையின்
வயதென்ன என்றாள்

அவை
இப்போது தான்
பிறந்தது போல்
எப்போதும் இருக்க
வேண்டுமென்றாள்

ரசத்தின் மணம்போல
உன் கவிதையிலும்
வாசம் வேண்டும் என்றாள்

அவள் சொல்லியரசனைபோல்
புதியதாய் இருக்க
அலுக்காமல் மலரும்
மலர்கள் போல்
தினம் தினம் பிறக்க
யத்தனிக்கின்றேன்

உன் அருகில்
உயிருள்ள கவிதையாய்
நானிருக்க

அங்கே என்னடா
கணினியுடன் காதல் சரசம்
என்பது போல்

எப்போதடா வீட்டுப்பாடத்தை
முடித்து மூடிவைப்பாய்
என்ற கேள்வி
முனகலாக
ஆங்கில வாசத்தில்
அவளிடமிருந்து

சற்றே சரிந்து
அவளை
உற்று நோக்குகிறேன்

சாண்டில்யனின்
யவனராணி போல
நீல விழிகளும்
அவற்றை மூடிய
மெல்லிய வெண் இமைகளும்

அதன் மேல்
அலட்சியமாய்
படர்ந்திருக்கும்
காப்பி நிறகேசமும்
என்னை எழுதவிடாமல் சீண்ட

இவளுக்கு மட்டும்
தமிழ் புரிந்தால்
வேறு எதுவும் சொர்கமில்லை
என்ற என் எண்ண ஓட்டத்தை
தடாலென நிறுத்துகிறேன்...

தமிழை ஆழ்ந்து
காதலிக்கும் என்னால்
எப்படி ஓர் ஆங்கில
தேவதையையும்
சரிசமமாய்
காதலிக்கமுடிகிறது
வியந்தபடி
தொடர்கிறேன்...

மன்றத்தில் பரிசு பெற்று
அதை
என்  அழகிய தேவதைக்கு
அர்பணிக்க
எழுதுகிறேனடி...

என் சத்தமில்லா
மெல்லிய பதில்
அவளை எழுப்பவில்லை
எழுந்தாலும்
அவள் படிக்கப்போவதுமில்லை
படித்தாலும்
புரியப்போவதுமில்லை

மொழிப்பெயர்த்து
சொல்ல கேட்க்கும்
அவளின் ஆர்வத்தை
ரசிக்கின்றேன்

சொற்களை
மொழிப்பெயர்க்கலாம்
அதன் சாரத்தையும் கூடத்தான்

கவிதை முழுதும்
என் உதவி இல்லாமலே
உறைந்து ஊடாடும்
ஜீவனை என்னென்று
மொழிபெயர்ப்பேன்

மொழியின் நாயகிக்கு
இசையை
உணர்த்த நாயகன்
படும் தவிப்பை
எனக்களித்து

நிச்சலனமான
நித்திரையில்
குழந்தைபோல்
என்னவள்

ஜப்பானின் பூகம்பம் - தப்பித்த பிஞ்சு குழந்தைகள்


 நம் கண்களில் நீரையும், இதயத்தில் வலியையும் உண்டு செய்த ஜப்பானின் பூகம்பம் மற்றும் அணு உலை வெடிப்பு, அந்த செய்திகளில் ஒரு அதிசயம்.  பிறந்து பத்து  நாட்களே ஆன குழந்தையும், ஒரு மூன்று மாதக் குழந்தையும் அந்த இடிபாடுகளில் உயிருடன் தப்பியது தான். பிறந்து 10 நாட்களில் பேரிடரில் காணாமல் போய் பின் கிடைத்த குழந்தையை பார்த்த தாயின் முகத்தில் தான் எத்தனை அமைதி. தப்பித்த இன்னொரு குழந்தைக்கு அதன் தந்தை வேறு பொருத்தமான பெயர் இவனுக்கு இல்லை என்று சொல்லி 'லக்கி' என பெயரிட்டிருக்கிறார்.  

28 பிப்ரவரி, 2011

முற்றுப் பெறாத தேடல்


கடவுளா? பரம்பொருளா?
தெய்வமா? பேருண்மையா?
சிவமா? கண்ணனா?

பூஜையறையில் இருக்கும்
மூவெட்டு உருவங்களா?
இருளா? ஒளியா?
வேகமா? பொறுமையா?
காற்றா? தீயா?
அண்டவெளியா?
ஆகாயமா?
கடலா? நிலமா?
அன்பா? கருணையா?
காதலா?
எது நீ?

எங்கும் நிறைந்திருப்பது
உண்மையென்றால்
ஏன் என் கண்களை
ஏமாற்றும்
இந்த வித்தை உனக்கு

படைப்பின் காரணமே
உன் இருப்பை
பறையறைய
இருக்கவே இருக்கிறது
கோடி உருவங்களில்
உன் படைப்புகள்

சுற்றிக்கொண்டிருக்கிறது பூமி
சுட்டுக்கொண்டிருக்கிறது சூரியன்
சுகமாய் வீசிக்கொண்டிருக்கிறது
என்றென்றும் தென்றல்


என்னேரமும் துளைத்து
துண்டாடும் என் கேள்விகள்...

பதில்லில்லா மௌனமே
உனக்கு எப்போதும்...

என் நேரமின்மையும்
இடைவெளியில்லா
வேலைகளும் - எனை
உன்னிடமிருந்து பிரித்து
வைப்பதாயில்லை
கொழுந்து விட்டெரியும்
நெருப்பாய் எரிந்து
கொண்டிருக்கிறது
தேடல்

சில நேரம் உணர்கிறேன்
உன் இருப்பை
ஆனாலும் அறிவுக்கு
புரியவில்லை

நேரத்தின் நீட்சியாகவும்
சுருக்கமாகவும்
உன் பிரும்மாண்டத்தை
ரசித்தபடி நான்...

தனக்கு தானே கேள்விகளும்
பதில் சமாதனங்களும்
பின் சமரசங்களும்
செய்து கொண்டபடியே
தொடர்கிறது
கிடைக்கும் வரை நிறுத்தாத
சங்கல்பத்துடன்
என் முற்றுப்பெறாத தேடல்....

19 பிப்ரவரி, 2011

டம்மி பீஸ்...


டம்மி பீஸு 1
நித்தி - என் மூன்று வயது மகன்.

அப்பா: டேய் ஏண்டா இப்படி வம்பு பண்னுற, எழுது, உனக்கு எழுத  தெரியாது?
எழுது சீ "C". அது தான் அவன் இரண்டு மாதங்களாக கற்றுக் கொள்ளும் முதல் எழுத்து.
நித்தி  : {பென்சிலை நோட்டில் வைக்காமலே சிணுங்கல்}
அப்பா: என்ன பிள்ளை நீ எழுத மட்டேங்குற?
நித்தி : டம்மி பீஸ்!!!????****
அப்பா: என்னது? எழுது டா.
நித்தி : உங்க ஜச்மண்டு ரெம்ப தப்பு. நான் டம்மி பீஸ்.
அப்பா: ஹா ஹா ஹ ஹா

டம்மி பீஸு 2
ஒரு சீன நண்பர்    : ஹெய் வாட்ஸ் யுவர் நேம்?
நித்தி                             : டம்மி பீஸ்
சீன நண்பர்               : ஹவ் கம்? ஹிஸ்  நேம் இஸ் டம்மியா?
அவன் அண்ணன் : நோ ஹி இஸ் ஜோக்கிங்க். ஹிஸ் நேம் இஸ் நித்திக்.

 டம்மி பீஸு 3

இன்னொரு நண்பர்: ஏய் ஸ்கூல்ல நல்லா படிக்கிறியா?
 நித்தி                             : இம்ம் சி படிச்சி, எ படிச்சி, டி படிச்சி 

 நண்பர்                         : ஏ பி சி டிய வரிசையா சொல்லித்தரலையா உங்க         டீச்சர்?
நித்தி                              : டம்மி பீஸு
நண்பர்                          : என்னது டம்மி பீஸா? உன் பேர் என்ன?
 நித்தி                             : டம்மி பீஸ்

டம்மி பீஸு 4


பள்ளி செல்லும் படிக்கட்டில் இவன் சிணுங்க, தினமும் நாலு மாடிக்கு தூக்க வைக்கிறானே என நான் வேகமாக பத்து படிகள் ஏறி விட கீழ்படியில் நின்று கொண்டு தூக்க சொல்லி சிணுங்க
தோழி ஒருவர்: "என்னடா உங்க அம்மா தூக்காம நடந்து வர சொல்றாங்களா? கூப்பிட்டு தூக்க சொல்லு"
 நான் பயந்தது போலவே அவன் 
நித்தி:  டம்மி பீஸு
தோழி: என்னடா நான் டம்மி பீஸா உனக்கு.
நான்: இல்ல அவன் கிட்ட உன் பேர் என்னன்னு கேளுங்க
தோழி: உன் பேர் என்ன?
நித்தி : டம்மி பீஸ்
எனக்கு அப்பாடா என்றிருக்க "இப்படித்தான் எது கேட்டாலும் வடி வேலு மாதிரியே பதில் பேசுறான்".
தோழி: இந்த காலத்து பிள்ளைங்க கிட்ட வாயே கொடுக்க முடியல, ரொம்ப சன் டீவி பாக்குறியோ?






1 பிப்ரவரி, 2011

குளிர் காலம்



சில்லென்ற காற்று
ஐஸ் வெப்பத்தில் தண்ணீர்

வெளிச்சமில்லா விடியல்

நிறுத்தாமல் கொட்டும் மழை

ஜன்னல் ஒரங்களில்
சாரல் முத்துக்கள்

சாக்கு விரித்த தரை

என்னேரமும் எரியும்
மின் விளக்கு

ஓடத்தேவை ஏற்படாத
காற்றாடி

வெயிலுக்காக
காத்திருக்கும்
துவைக்காத துணிகள்

இரும்பு மேஜையின் மீது
புதிதாய் விரிப்பு

தேடிப்பிடித்து அணியப்படும்
ஸ்வெட்டர்கள்

வீதியில் விரியும்
குடைப் பூக்கள்

வண்ண வண்ணமாக
மழைச்சட்டைகள்

அலுத்துக்கொள்ளும்
சலித்த மனம்

மழையை கண்டால்
தோகை விரித்து
ஆடும் மயில் போல்
முன்பு குதித்த அதே மனம்

அம்மாவின்
குளிர் கால பயம்
என்னையும் பற்றிக்கொள்ள

மழையென்றால்
ஏன் பயப்படுகிறாய்

என அம்மாவிடம்
கேள்வி எழுப்பிய
என் பேதமையும்

ஒரு நாள்
பாத்திரம் தேய்த்துப்பார்
என சவால் விடாமல்

இரு இரு
இன்னும் கொஞ்ச காலம்
தானே இப்படி
அவிழ்த்து விட்டது
போல் திரியமுடியும்

அதன் பின் உனக்கே தெரியும்
என்ற உள் குத்து
இப்போது தான்
புரிகிறது

புரிந்தாலும் அம்மா
எவ்வளவோ
பண்ணிட்டோம்

இதென்ன பெரிய வேலை?
நடுங்கிக்கொண்டே

பாத்திரம் தான்
தேய்ப்போமே
வேறு வழி??!!!

31 ஜனவரி, 2011

திருமண நாள் வாழ்த்து


 நீ என்னை
விரும்புவதற்காக மட்டும்
நான் உன்னை
விரும்பவில்லை
 எண்ணில்லாத அழகான
இனிமையான
தருணங்களால் என் வாழ்வை
நிறைப்பதற்காகவும்
கூட இல்லை
அன்பாய், இனிமையாய், பரிவாய்
இயல்பாகவே இருப்பதால்
என்னவளிடம் நான் எதிர்பார்த்த
அத்தனை குணங்களுடனும்
நீ நீயாகவே
இருப்பதால்
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்

30 ஜனவரி, 2011

இதுவும் கடந்து போகும்...


எதுவும் மாறலாம்
தலைகீழாகலாம்...

வெண்மையின் கருவில்
கருமையும் வாழலாம்...

வெண்மேகங்கள் நீர் கோர்த்து
கருமேகமாவது போல்...

பின் அமில மழையும்
கொட்டித்தீர்க்கலாம்...

கோரபற்களின் கொடு
தாக்குதலுக்கும் மேல்
வலிமையாக...

நகைச்சுவை எனும்
பேரில் குதறித் துப்பலாம்...

கள்ளமறியா
நேர் சிந்தனையும்
உதவும் உள்ளமும்
மட்டுமே உனக்கு
அரணாயிருந்தாலும்...

தனக்கு வேண்டியதை மட்டுமே
தருவித்து கொள்ளும்
தனித்திறமை கூட்டி
திரிபவர்களிடமிரிந்து
தற்காத்துக் கொள்வதற்காகவாவது

கள்ளம் பழகு
பொய்மை பழகு

மென்மையே வியாபித்திருக்கும்
மனதை கல்லாக்கு

மனதில் இல்லையென்றாலும்
வெறுப்பை உமிழப்பழகு

இளம் பச்சையாய் துளிர் விட்டு
பின் கரும்பச்சையாகி
மஞ்சளாகி காய்ந்து விழும்
இலைகளைப்போல்

இதுவும் கடந்து போகும்...

28 ஜனவரி, 2011

நித்தியின் சாகசங்கள் - 1

எந்த சட்டையை போட்டுவிட எடுத்தாலும் அதிலிருக்கும் அளவு எழுதிய சீட்டை வெட்டி எடுத்தால் தான் போட்டுக்கொள்வேன் என அடம் பிடிப்பான் என் 3 வயது சின்ன மகன். என்னவோ அது அவனை ரொம்ப தொந்தரவு செய்கிறது போலும். முன்பெல்லாம் கோபப்பட்டு வேண்டாமென சொல்லி, தோற்று சரி என வெட்டி விட்டு, போட்டு விட ஆரம்பித்து விட்டேன்.  நேற்று போட்டுக்கொள்ள சட்டை எடுத்து வைத்து விட்டு குளித்து முடித்து வந்த எனக்கு அதிர்ச்சி. தரையில் வெள்ளை வெள்ளையாய் என்னெவோ கிடக்க கையில் சமையலரை  கத்தரிக்கோலுடன் இவன் மும்முரமாக வெட்டிகொண்டிருந்தான். என்ன செய்யுறே என்றால், மம்மீ இது பேப்பே (அவன் பேப்பரை அப்படித்தான் சொல்வான்) கட் டு மம்மி. என்று பதில் சொல்லி மறுபடியும் அவன் குனிய, அய்யோ அது அடிடாஸ் டீ ஷர்ட் டா வெட்டிடாத என்று சொல்லி கையை பிடித்து நிறுத்தி பார்த்தால் அதற்கு முன்பே மூன்று வெட்டுக்கள் வாங்கி பல் இளித்து கொண்டிருந்தது அந்த டீ ஷர்ட்.  கோபத்துக்கு மேல் வெடித்துக் கொண்டு வந்தது சிரிப்பு தான். அய்யோ நல்ல சட்டையை இப்படி வெட்டிட்டே பாரு என்று  நான் காட்ட, அப்போது கூட சரியாக வெட்டாமல் மிச்சம் நீட்டிக்கொண்டிருந்த பேப்பரை காட்டி சரியாக வெட்ட முடியவில்லலையே என்று கவலை கொண்ட அந்த பிஞ்சு முகம் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. அதன் பின் சட்டையில் இருந்த கிழிசல்களை பார்த்த அவன் அடாடா என்றான். இதுவே இன்னும் ஒரு வருடத்திற்கு முன் என்றால் எப்படி நடந்து கொண்டிருப்பேனோ! குறைந்தது ஒரு அடியாவது வாங்கியிருப்பான். மனதின் மாற்றங்கள் வாழ்க்கையில் பிரதிபலித்த மற்றுமொரு இனிய தருணம். 

27 ஜனவரி, 2011

என்னுள் எத்தனை மாற்றங்கள்?


மூன்றுக்கு அடுத்த
பரிமாணம்
உணர்ந்து பார்த்து
விட
முக்காலமும் முயற்சி
நேற்று என்பது
இனியில்லை
நாளை என்பது
எப்போதும் நாளையே
நாளை என்பது
இன்றாகும் போதே
நாம் அதில்
வாழ்ந்திருப்போம்
இன்றில் இப்போதில்
வாழக் கற்றுக்கொண்டால்
வாழ்க்கையை
அள்ளிப்பருகலாம்
விண்னை
மட்டுமே ரசித்த
வெளிச்சத்தை
மட்டுமே ரசித்த
மலர்களை
மட்டுமே ரசித்த
அழகை
மட்டுமே ரசித்து
உவகை கொண்ட உள்ளம்
இப்போது
மண்ணையும்
இருளையும்
முட்களையும்
விருப்பத்தையும்
விருப்பமின்மையையும் கூட
அப்படியே ஏற்றுக்கொண்டு
கொண்டாட
ஆரம்பித்ததென்ன?
என்னுள்
எத்தனை எத்தனை மாற்றங்கள்?

26 ஜனவரி, 2011

ஓங்கி உரைத்திடும் இயற்கை

ஓய்வின்றி பாய்கிறது
வெள்ளி நீரோடை...
வெள்ளமாய் வீழ்கிறது
மலையருவி...
இருள்பொத்தி அமைதி
காக்கிறது கானகம்...
எல்லாம் கூடி
என்ன சொல்கின்றன?
தணிந்த அசைவுகள்
அன்பு பொங்கும் இதயம்,
சலனமில்லா மனம்,
திமிரும் பெருமிதம்,
ஒப்பிலா இயற்கையில்
எல்லாம் சாத்தியம்!

...இது நான் மிகவும் ரசித்த கவிதை

24 ஜனவரி, 2011

மறுபடியும் ஒரு அழகான கடற்கரை மாலைப்பொழுது....

மெத்தென்ற பச்சைப்
புல்வெளி...
கண்ணுக்கெட்டிய
தூரம்வரை...
அந்தி நேர ஈரக்காற்று...
பறக்கும் பட்டங்கள்...
புதுமையாய்
வண்ணங்களும்
வடிவங்களும்...
பறக்க விடுவதே கருத்தாய்
ஒரு நூறு மனிதர்கள்...
கூடவே விளையாடும்
சிறுவர்கள்...
கடற்கரை ஒரத்தில்
மனதை வசீகரிக்கும்
மாலைப்பொழுது...
பல கடற்கரை பொழுதுகளில்
இதுவும் ஒன்றானாலும்...
இது புதுமை...
பார்வையாளினியாய்
பார்ப்பதை விடுத்து
களமிறங்கியதில்...
பட்டத்தோடு பரிச்சியம்....
அது உயர உயர பறக்க
கிடைத்த பரவசம்...
மறுபடி அது கீழேவிழ
மடிந்து போகும் அகம்பாவம்...
காற்றும் நம் விரல்களும்
ஒருங்கினைந்து விளையாட
காற்று விசும் திசையை
உணரும்  நுட்பத்தை...
என்னேரமும் அறிய
உண்டாகும் விழிப்புணர்வு...
படித்த பல புத்தகங்களில்
கிடைகாத அனுபவம்...
எதுவாய் இருந்தாலும்
களமிறங்கி
விளையாடிப்பார்ப்பதும்...
அதில் அமிழ்ந்து விடுவதும்...
புத்தகம் படிப்பது போலவே
சுவரஸ்ய வரங்கள் தான்...
பிடித்தது பிடிக்காதது
என பகுத்து பார்த்து
சிலவற்றில் சிக்கிக்கொண்டு...
பலவற்றை ஓரம் வைக்காமல்...
பிடிக்காததையும்
விருப்பத்துடன்
செய்து பழகினால்...
உள்ளே உறுதிபடும் ஒன்று
மனமா? அறிவா? புத்தியா? உடலா?
சரியாகத்தெரியவில்லை...
ஒரு மகத்தான பாடம்.
மனதில் பதிய வித்திட்ட
அழகான மாலைப்பொழுது....

11 ஜனவரி, 2011

சனா சனா ஈசீ ஈசி...

வழக்கம் போல ஒரு நாள், வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்து நிறைய பொருட்களை எடுத்து பரப்பி விட்டு சரி செய்து அடுக்கும் வேலை. இன்று ஒரு அறையிலிருக்கும் அத்தனை பொருட்களும் வேகமாக தரையில் கிடத்தப்பட (பெரும்பாலும் இப்படித்தான் எதை ஆரம்பித்தாலும் அதனுள் சென்று விடுவதே இயல்பாகவும் அதுவே சில சமயம் நன்மையாகவும், தீமையாகவும் மாறிவிடுவதும் உண்டு) என் பெரிய மகன் என்றோ பார்க்க கிடைக்ககூடிய சில அபூர்வமான சாமங்களை வைத்துக்கொண்டு விளையாட ஆரம்பிக்க, 
வழக்கம் போல் நான் பொறுமை இழந்து எந்த உதவியும் இல்ல என் வேலையையும் லேட் பண்ற என்று உச்ச கதியில் ஆரம்பிக்க,  இன்னொரு பக்கத்திலிருந்து ஒரு குரல், " சனா சனா ஈசி ஈசி" " கூல் கூல்" என்று. திட்டு வாங்கிக்கொண்டிருந்த பெரிய மகன் சத்தமாக சிரிக்க ஆரம்பிக்க அப்புறம் தான் இந்த வாக்கியத்துக்கு அர்த்தம் புரிந்தது எனக்கு. போய் தூங்கு என்று சொன்னவுடன் தலையை தொங்க போட்டுக்கொண்டு மனமில்லாமல் 
கட்டிலுக்கு நடையை கட்டிய சின்ன மகன் (3 வயது) திடீரென என்னருகில் வந்து சொன்னது தான் சனா சனா ஈசி ஈசி..... சரியாக பேசவர வில்லையென்றாலும் எப்போதுமே எல்லாவற்றையும் கூர்ந்து கவனிததபடி இருப்பான். ரோபோ படத்தை பல முறை பார்த்து அந்த டயலாக் எல்லாம் மனப்பாடம். படத்தில் ஐஸ்வர்யா வரும் போதெல்லாம் மம்மி மம்மி என்று அவன் அப்பாவை வெறுப்பேற்றியது போதாது என்று இது வேறா கடவுளே!!      

5 ஜனவரி, 2011

வெறுமை


எப்போதும் என் கழுத்தைக்
கட்டிக்கொண்டிருக்கும்
உன் கைகள்

அம்மா அம்மா என்றழைக்கும்
உன் இனிய குரல்

என்னைத்தூக்கியே
வைத்துக்கொள்
என்று கேட்கும்
உன் நீட்டிய கைகள்

நொடிக்கொரு முறை
அம்மாவை பார்த்து
இங்கு இருப்பதை
உறுதிபடுத்திக்கொள்ளும்
ஜாக்கரதை உணர்வு

மூன்று வயதிலும்
புட்டியில் பாலை
அம்மா மடியில் படுத்து
குடிக்க காத்திருக்கும்
அந்த பொறுமை

உன் தீராத விளையாட்டில்
திக்குமுக்காடிப்போகும் நான்

உன் வம்பில்
கோபம் தலைக்கேறி
சத்தமிட ஆரம்பித்தால்

அமைதியாய் அருகில் வந்து
அம்மா என்று அடிக்குரலில்
நீ செய்யும் சமாதானம்

இத்தனை நாட்கள்
நான் உன்னை
பார்த்துக்கொண்டேனா?
நீ என்னை
பார்த்துக்கொண்டாயா?

உன்னை மழலையர்
பள்ளியில்
விட்டு வெளியில்
நான் அழுகிறேன்

உன் முகம்
வாடியிருக்குமோ
வெளியில் நின்று
கதவிடுக்கில்
பார்க்கிறேன்

வீடுவர மனமேயில்லாமல்

அங்கேயே
ஒரு மணி நேரம்
சுற்றுகிறேன்.


நீ விளையாடுவதை பார்த்து
வீடுவந்த பின் தான் தெரிகிறது

ஒரு மணி நேரம்
ஓய்வு கிடைக்காதா
என ஏங்கிய நாட்கள் போய்

நீ இல்லாத இந்த நேரம்

வெறுமை சூழ்ந்து

தித்திப்பே இல்லாத
சர்க்கரை போல்

கசப்பே இல்லாத
பாகற்காய் போல்

உன் சத்தம் இல்லாத வீடு
அமானுஷ்ய அமைதியாய்

இந்த மூன்று மணி
நேரப்பிரிவு
யுகயுகமாய் நீள

தாங்கமுடியாமல்
தவிக்கிறேன்

கண்ணே உனக்கேனடா
இவ்வளவு அவசரமாய்
மூன்று வயது
முடிந்தது?

4 ஜனவரி, 2011

காதல் கொள்...

{என் ஆன்மிகத் தேடல் பயணத்தில்
என்னை நானே அடித்து கொண்ட சவுக்கடி}

அன்பிடம்
காதல் கொள்
அன்பின்மையிடமும்
காதல் கொள்
முழுமையிடம்
காதல் கொள்
வெறுமையிடமும்
காதல் கொள்
கருணையிடமும்
காதல் கொள்
கருணையின்மையிடமும்
காதல் கொள்
திமிர் போர்த்திய பயத்திடம்
காதல் கொள்
கோபம் போர்த்திய ஏமாற்றத்திடமும்
காதல் கொள்
நிறைவு போர்த்திய துன்பத்திடமும்
காதல் கொள்
உணர்வின்மை போர்த்திய சுயவிரக்கத்திடமும்
காதல் கொள்
தேள் பேச்சு போர்த்திய பொறாமையிடமும்
காதல் கொள்
பந்தா போர்த்திய குற்ற உணர்ச்சியிடமும்
காதல் கொள்
தன்னடக்கம் போர்த்திய செருக்கிடமும்
காதல் கொள்
தைரியம் போர்த்திய பயத்திடமும்
காதல் கொள்
அலட்சியம் போர்த்திய எதிர்பார்ப்பிடமும்
காதல் கொள்
எதுவுமே போர்த்தாத அழுகையிடமும்
காதல் கொள்
கலப்படமே இல்லாத மகிழ்வுடனும் முற்றாக
காதல் கொள்
அத்தனையும் கலந்த கலவையான மனதிடமும்
காதல் கொள்
அது செய்யும் சேட்டைகளை
செயப்படுபொருளாக இல்லாமல்
தள்ளி நின்று பார்த்து பிரமித்து
காதல் கொள்
உன் மனதை காதல் கொள்
உன்னிடமே காதல் கொள்
உன் நீட்சியான பிற உயிர்களையும்
காதல் கொள்
செய்யும் செயலை காதல் கொள்
பலன் வருமுன்பே
செயல் செய்த நிறைவை
காதல் கொள்
மஹாபாரத கிருஷ்ணன் கூறிய
பலனை எதிர்பாராமல்
கடமையை செய்தல்
இதுவே
ஆகவே காதல் கொள்
உன்னையும் பிறரையும் கூட
காதல் கொள்
காதலாகவே மாறிவிடு....
அமைதியா அமைதியின்மையா
இன்பமா துன்பமா
எல்லாம் ஒன்றே உணர்ந்து விடு...