தேடலின் அக்னி தீவிரமாய்
தேடிய மனத்தையே அழிக்க
ஆரம்பித்திருந்த தருணம்
பல பயிற்சிகளையும் முயற்சிகளையும்
கெட்டியாக பிடித்திருந்த நேரம்
புலால் விலக்கி விரதமிருந்து
உடல் வாடி மனம் வாடி
நொந்து நோய் அடைந்த கணம்
முயற்சிகளெல்லாம் தோல்வியடைந்த நொடி
சட்டென ஒரு மாயை
மனம் தானே இயங்குவதையும்
ஓடிச்சென்று அதனுடன் குழப்பம் செய்யும்
மனதின் இன்னொரு பகுதி
தனியாக இயங்குவதையும் தெளிவாக உணர்த்திய
அந்த வினாடி மிகச்சிறியது தான்
ஆனால் கிடைத்தற்கரிய மிகப்பெரிய பரிசு
விடுதலையான விந்தை
தொடர் மனப்போராட்டம்
முற்றுப்பெற்ற முடிவு
ஓயாத மன அலைகள்
இப்போதும்....
ஆனால் அவை ஒடும் போது
உரசல்கள் இல்லை
தடங்கலற்ற வெள்ளப் பிரவாகம்
இப்படியும் ஒரு ஞான நிலை
இதே பைத்தியக்கார மனதில்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக