23 ஜனவரி, 2016

ஞானம்



தேடலின் அக்னி தீவிரமாய் 
தேடிய மனத்தையே அழிக்க 
ஆரம்பித்திருந்த தருணம்

பல பயிற்சிகளையும் முயற்சிகளையும்
கெட்டியாக பிடித்திருந்த நேரம்

புலால் விலக்கி விரதமிருந்து
உடல் வாடி மனம் வாடி
நொந்து நோய் அடைந்த கணம்

முயற்சிகளெல்லாம் தோல்வியடைந்த  நொடி
சட்டென ஒரு மாயை

மனம் தானே இயங்குவதையும்
ஓடிச்சென்று அதனுடன் குழப்பம் செய்யும் 
மனதின் இன்னொரு பகுதி 
தனியாக இயங்குவதையும் தெளிவாக உணர்த்திய

அந்த வினாடி மிகச்சிறியது தான்
ஆனால் கிடைத்தற்கரிய மிகப்பெரிய பரிசு

விடுதலையான விந்தை
தொடர் மனப்போராட்டம் 
முற்றுப்பெற்ற முடிவு

ஓயாத மன அலைகள் 
இப்போதும்....
ஆனால் அவை ஒடும் போது 
உரசல்கள் இல்லை 
தடங்கலற்ற வெள்ளப் பிரவாகம்

இப்படியும் ஒரு ஞான நிலை 
இதே பைத்தியக்கார மனதில்....













10 நவம்பர், 2014

தோல்விக்கு நன்றி

தோல்விக்கு நன்றி

கிடைத்தற்கரிய 
பல பாடங்களை மௌனமாய்
மனதில் பதியவைத்து

பல மாற்றங்களை
கவனமாய் நடைமுறைப்படுத்தி

கசப்பின் வழி இனிப்பின் 
அருமையை 
உணர வைத்து

கசப்பை வெறுத்து
இனிப்பை விரும்பும் இருமையையும்
வெட்டி வீழ்த்தி

இதுவரை உணர்ந்திராத 
மனத்தின்மையை 
வெளிச்சத்தில் கொண்டுவந்து

பெருஞ்சுமையை மனத்திலிருந்து 
இறக்கி வைத்து

எதையும் பிறருக்காக 
அவர்களிடம் மதிப்பு 
உயர வேண்டும் 
என்பதற்காக செய்யும் 
கோமாளித்தனங்களை
அவற்றில் செலவாகும் 
ஆற்றலை மிச்சப்படுத்தி

லட்சியக்கனவில் பறந்து கொண்டிருந்த
மனதை தட்டி எழுப்பி

கோபமும் அச்சமும் மனஉச்சத்தில் 
ஏறி இறங்கும் போது 
வீணாகும் ஆற்றலை 
புரிய வைத்து

எங்கெங்கோ தேடி அலைந்த 
மன அமைதியும், நிறைவையும்
இருக்குமிடம் சுட்டிக்காட்டி

தேடுதலின் தேவையின்மையையும்
ஆழ உணர்த்தி

அமைதியின்மையின் ஆணிவேரை
அப்புறப்படுத்தி

வாழ்வின் பொருளை 
உணரவைத்து

இப்படி ஒரு நிலை
என்னுளேயே இத்தனை காலம் இருந்ததை
எடுத்து அறிவித்த

தோல்விக்கு நன்றி.....

7 ஜூன், 2014

மனம் இப்போது...

நோக்கமின்றி காயபடுத்தியதில் 
வலியொன்றும் பெரிதாயில்லை
தாக்கமெதுவும் மனதிலில்லை

கோபத்தில் மோதியதில்
கோபம் தீர்ந்த பின்
வருத்தமும் திருத்தமும் 
மட்டுமே மிஞ்சியது

வேண்டுமென்றே காயப்படுத்துவது
எப்போதுமேயில்லை என்பதில்
மமதை தோன்றுகிறது

தன் தவற்றிலிருந்து
தானே கற்றுகொள்வது
அறிந்து மனம் தெளிந்தது

மனம் வேறு, புத்தி வேறாய் 
நின்று வாதம் செய்யச் செய்ய
இரண்டிலிருந்தும் தள்ளி நின்று 
நான் இரண்டுமல்ல என்பது
புலனாயிற்று

முதலும் முடிவும் தெரியாமல்
குழம்பி கிடக்கும் மனிதம்
சிறு தெளிவிலும் 
பெரிதாகத்தான் திளைக்கிறது

6 ஜூன், 2014

மழையில் ஒரு பயணம்



திகட்ட திகட்ட நனைந்தேன்
குளிர் எலும்புகளில் ஊடுருவ
நடுங்கிக்கொண்டே நடந்தேன்
மழையை விருப்பத்துடன் என்னில்
வாங்கிக்கொண்டேன்

 முன் செல்லும் என் மகன் அறியான்
நான் நனைந்துகொண்டு
அவனிடம் குடை கொடுத்தது
அவனுக்காக மட்டும் அல்ல என்று


3 நவம்பர், 2011

மறந்து போன தமிழ் தட்டச்சு

மிக நீண்ட காலமாய் திறக்கப்படாத தமிழ்ச்சோலைக்குள் இப்போது சும்மா போவோமே என்று பார்த்தால் அட நாமா இவ்வளவு வளவள என எழுதி தொலைத்திருக்கிறோம் என ஆச்சர்ய படும்படி பழைய இடுகைகள் எல்லாம் யாரோ எழுதியது போல் அன்னியபட்டு நிற்கின்றன. அஹா மறுபடியும் எழுதியே ஆகவேண்டும் என்ற தோன்ற தமிழில் தட்டச்ச தாறுமாறாக போகிறது வார்த்தைகள். இதுவரை எழுதாததால் இணையத்தில் என் பங்குக்கு சில குப்பைகளை சேர்க்காமல் இருந்த திருப்தியை இப்போது இழக்கப்போகிறேன். சரி. இன்னும் 1 எம் பி சேர்வதால் இணையம் கனமாகிவிடாது என்ற எண்ணத்தில் தொடர்கிறேன். வெட்டித்தனமாக இல்லாமல் எதையாவது செய்தே ஆக வேண்டும் என்று செய்த நேரம் போய், இன்னும் கொஞ்சம் நேரம் அதிகமாக கிடைக்காதா என்றாகிவிட்டது வாழ்க்கை. மனதின் பழைய நிறைவின்மை கொஞ்ச காலம் புதிய சவாலான வேலைக்குள் ஒளிந்திருந்தது போலும்... இப்போது மெல்ல மீண்டும் தலை காட்ட ஆரம்பித்து விட்டது. வேலை செய்யாமல் வீட்டிலிருப்பது தான் நிறைவின்மை தருகிறது என்ற தப்பான எண்ணம் இப்போது இல்லை. ஆனால் எதை கொட்டி நிறைப்பது என்பது பெரிய கேள்வியாய் இருக்கிறது. கேள்வியே தெளிவாக இல்லாதபோது பதில் எப்படி கிடைக்கும்? இது இப்படித்தான் வெகுகாலமாய் என்னை குடைகிறது. சரி எதில், எப்பொது பதில் வருமென விழித்திருக்கிறேன்.