7 ஜூன், 2014

மனம் இப்போது...

நோக்கமின்றி காயபடுத்தியதில் 
வலியொன்றும் பெரிதாயில்லை
தாக்கமெதுவும் மனதிலில்லை

கோபத்தில் மோதியதில்
கோபம் தீர்ந்த பின்
வருத்தமும் திருத்தமும் 
மட்டுமே மிஞ்சியது

வேண்டுமென்றே காயப்படுத்துவது
எப்போதுமேயில்லை என்பதில்
மமதை தோன்றுகிறது

தன் தவற்றிலிருந்து
தானே கற்றுகொள்வது
அறிந்து மனம் தெளிந்தது

மனம் வேறு, புத்தி வேறாய் 
நின்று வாதம் செய்யச் செய்ய
இரண்டிலிருந்தும் தள்ளி நின்று 
நான் இரண்டுமல்ல என்பது
புலனாயிற்று

முதலும் முடிவும் தெரியாமல்
குழம்பி கிடக்கும் மனிதம்
சிறு தெளிவிலும் 
பெரிதாகத்தான் திளைக்கிறது

6 ஜூன், 2014

மழையில் ஒரு பயணம்



திகட்ட திகட்ட நனைந்தேன்
குளிர் எலும்புகளில் ஊடுருவ
நடுங்கிக்கொண்டே நடந்தேன்
மழையை விருப்பத்துடன் என்னில்
வாங்கிக்கொண்டேன்

 முன் செல்லும் என் மகன் அறியான்
நான் நனைந்துகொண்டு
அவனிடம் குடை கொடுத்தது
அவனுக்காக மட்டும் அல்ல என்று


3 நவம்பர், 2011

மறந்து போன தமிழ் தட்டச்சு

மிக நீண்ட காலமாய் திறக்கப்படாத தமிழ்ச்சோலைக்குள் இப்போது சும்மா போவோமே என்று பார்த்தால் அட நாமா இவ்வளவு வளவள என எழுதி தொலைத்திருக்கிறோம் என ஆச்சர்ய படும்படி பழைய இடுகைகள் எல்லாம் யாரோ எழுதியது போல் அன்னியபட்டு நிற்கின்றன. அஹா மறுபடியும் எழுதியே ஆகவேண்டும் என்ற தோன்ற தமிழில் தட்டச்ச தாறுமாறாக போகிறது வார்த்தைகள். இதுவரை எழுதாததால் இணையத்தில் என் பங்குக்கு சில குப்பைகளை சேர்க்காமல் இருந்த திருப்தியை இப்போது இழக்கப்போகிறேன். சரி. இன்னும் 1 எம் பி சேர்வதால் இணையம் கனமாகிவிடாது என்ற எண்ணத்தில் தொடர்கிறேன். வெட்டித்தனமாக இல்லாமல் எதையாவது செய்தே ஆக வேண்டும் என்று செய்த நேரம் போய், இன்னும் கொஞ்சம் நேரம் அதிகமாக கிடைக்காதா என்றாகிவிட்டது வாழ்க்கை. மனதின் பழைய நிறைவின்மை கொஞ்ச காலம் புதிய சவாலான வேலைக்குள் ஒளிந்திருந்தது போலும்... இப்போது மெல்ல மீண்டும் தலை காட்ட ஆரம்பித்து விட்டது. வேலை செய்யாமல் வீட்டிலிருப்பது தான் நிறைவின்மை தருகிறது என்ற தப்பான எண்ணம் இப்போது இல்லை. ஆனால் எதை கொட்டி நிறைப்பது என்பது பெரிய கேள்வியாய் இருக்கிறது. கேள்வியே தெளிவாக இல்லாதபோது பதில் எப்படி கிடைக்கும்? இது இப்படித்தான் வெகுகாலமாய் என்னை குடைகிறது. சரி எதில், எப்பொது பதில் வருமென விழித்திருக்கிறேன்.

30 ஜூன், 2011

இங்கா...



இங்கா...

இதோ எங்கோ ஒரு அசௌகர்யம்
ஆரம்பமாகி விட்டது
இப்போது நெளிய ஆரம்பிக்க வேண்டும்
மேலே அதென்ன ஒரு முகத்தையும்
காணவில்லை
சரி கொஞ்சமாக கத்திப்பார்ப்போம்
வந்து விடுவாள்
"இங்கூ... இங்கூ..."

தலையை திருப்பி திருப்பி பார்த்தும்
ஒன்றும் தெரியவில்லை
இம்ஹூம் வருவதாக தெரியவில்லை
அதற்குள் ரொம்ப வயிற்றை என்னமோ செய்கிறதே
சரி வேறு வழியில்லை வேகமாக கத்த...
உர்ரே...உர்ரே.....இம்ம்ம்...ம்மா...
இங்கா....இங்கா....இங்கா...

அட பதறியதித்து வருபவள்
அவளே தான் என் தேவதை, அம்மா

அச்சச்சோ பிள்ளைக்கு பசிக்குதா?
இதோ அம்மா வந்துட்டேன்
அழாத செல்லம் என்று
இன்னும் என்னென்னவோ சொல்லி
தூக்கி கொஞ்சினாள்
பாலை வாயில் கொடுப்பதாய் தெரியவில்லை

இரு தங்கம் பாட்டி இங்கா ஆத்துறாங்க
இப்போ சாப்பிடலாம்
என்றபடி தூக்கி தோளில் சாய்த்துக்கொண்டாள்
இப்போ கொஞ்சம் அதென்ன? பசி... பரவாயில்லை
அட திரும்பவும் என்ன
இனி முடியாது
மீண்டும் கத்த வேண்டும் போலிருக்கு
அப்போதான் தருவாங்க
ஆ...இங்கா...இங்கா...

அப்போது பால் புட்டியின்
முனை வாயில் செருகப்பட
அப்பாடி ஒரு வழியா கொடுத்.....
முடக் முடக் என்று குடித்த வேகத்தில்
எல்லாம் மறந்து போயிற்று

அட குடித்து முடித்து விட்டேன்
இன்னும் இந்த அம்மா
புட்டியை எடுக்க மாட்டேங்குறாளே?
திரும்ப முயற்சி செய்த போது
இன்னொரு கை தலையை
நகர விடாதபடி பிடித்தது

வாயையும் வெளியில் எடுக்க முடியல
தலையையும் திருப்ப முடியல
ஆனா நான் குடிச்சிட்டேனான்னு
கூட பாக்க மாட்டேங்குறா...
என்ன அம்மா இவ?
சரி இப்படியே இன்னும்
எவ்வளவு நேரம் இருக்கனுமோ?

குழந்தை குடிச்சுட்டன் பாரு
தூக்கி தோளில் போட்டுத்தட்டு
ஏப்பம் விடட்டும்
என்ற அந்த குரல்
நல்ல வேளை சீக்கிரமே வந்தது.

அடாடா குடிச்சிட்டியா
சரி என்றபடி ஏப்பம் விட வைத்தாள்
பின் மீண்டும் கொஞ்சி விட்டு
படுக்கையில் போட்டு விட்டாள்
துணியை மாற்றி துடைத்துவிட்டு

மாவு அடிக்கும் போது
கொஞ்சம் வாசம் வந்தது
நல்ல நெடி மூக்கில் ஏறிவிட சச்சு இதென்ன?
அய்யோ பிள்ளை தும்முறான் சளி இருக்குமோ?
எதையோ எடுத்து தலையிலும் நெஞ்சிலும் தடவ
இது என்ன வேறு வாசத்துடன் ஜில்லுன்னு இருக்கே
கொலோன் தடவினா சளி சரியாகிடுமாம் தங்கத்துக்கு
சொல்லிக்கொண்டே தேய்த்தாள்
சளி இருந்தாத்தானே?

பவுடர் மூக்கில் ஏறி தும்மினேன்னு இவளுக்கு ஏன் புரியல
மக்கு அம்மா
இன்னும் என்ன செய்யிறா?
இந்த வெயில்ல கைக்கும் காலுக்கும் உறை போடுறாளே
இனிமே குளிறாது நல்லா தூங்குங்க சரியா?
மறுபடியும் முத்தம்

மடியில் கிடத்தி...
ஏன் இப்படி தட்டுகிறாள்?
நானே தூங்குவேனே...
இது என்ன கண்ணை மூடி இழுக்குதே
சரி இம்ம்..தூங்குவோம்....

ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் இங்கா...

23 மே, 2011

எதிர்பாரா வாழ்த்து

எதிர்பாரா வாழ்த்து




--------------------------------------------------------------------------------



அன்று என் பிறந்த நாள். காலை கண்விழித்தவுடன் கணவரின் வாழ்த்து. வழக்கம் போல் சமையலை ஆரம்பித்து அதில் என்னை மறந்தேன். என் பெரிய மகன் விழித்தெழுந்தான். அறையை விட்டு வெளியே வந்தவுடன், வாழ்த்து சொல்வான் என எதிர் பார்த்தேன். சொல்லவில்லை. சரி மறந்திருப்பானோ என விட்டு விட்டேன். சற்று நேரத்தில் இன்று உங்க அம்மாவுக்கு பிறந்த நாள் தெரியுமா? என்ற அவன் தந்தையின் கேள்விக்கு மேல் கீழாகத் தலையசைத்தான். அப்போதும் கூட வாழ்த்து சொல்லவில்லை. நான் சும்மா இல்லாமல் இனி அவன் பிறந்த நாளுக்கும் இப்படியே செய்வோம் என்று சொன்னேன். பாவம் அவன் முகம் வாடிவிட்டது. அதற்கு கூட அவன் பதில் பேசவில்லை. அப்புறமும் விடாமல் "ஏண்டா தம்பி அம்மா மேல கோபமா? என்றேன்". "இல்லம்மா உனக்கு ஆட்டோமேட்டிக்கா வாழ்த்து வரும்" என்றபடி பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நடந்து கொள்வது முதல் முறையாக புதிராக இருந்தது. என்னவோ சரி என விட்டு விட்டு வேலை மும்முரத்தில் பிறந்த நாளை மறந்தும் போனேன். பின் சின்ன மகனை பள்ளியில் விட்டு கோவிலுக்கு சென்று வந்து மற்ற வேலைகளை பார்த்தேன். சின்ன பிள்ளை பள்ளி விடும் நேரமானது. அழைத்து வருவதற்காக கிளம்பி சென்று மின் தூக்கிக்காக காத்திருந்த போது என் பாக்கெட்டிலிருந்து வித்தியாசமான இசை கேட்கவே திடுக்கிட்டேன். அட கைத்தொலைபேசி ரிங்க் டோன் மாறி விட்டதா? இல்லையே சற்று முன் கூட ஒரு கால் வந்ததே அதற்கு வாய்ப்பே இல்லையே எனக்குழம்பியபடி, வெளியில் எடுத்து பார்த்தால், ஹேப்பி பர்த்டே என மின்னிய படியே இசை பாடியது. சரியாக நான் பிறந்த நேரத்தில் வாழ்த்து வரும்படி செட் செய்திருக்கிறான். சின்னவனாக இருக்க வாய்ப்பில்லை. எம்டி மெசேஜ் அனுப்பவும், கேம் விளையாடவும் மட்டுமே அவனுக்கு தெரியும். அவங்க அப்பாவுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. பெரியவன் தான். இரு நாட்களுக்கு முன் நீ பிறந்த நேரம் பகலா, இரவா? எத்தனை மணிக்கு பிறந்தே என்றெல்லாம் துளைத்தது இதற்கு தானோ என்றெண்ணிய போதே என் கண்களில் நீர் வழிந்தது. இந்த பிள்ளையை எவ்வளவு வருத்தப்படுத்துகிறோம் என்று தோன்றியது. அன்று அவன் பள்ளி விட்டு வந்தவுடன் மிகச் சாதாரணமாக "என்ன வாழ்த்து வந்ததா?" என்றான். "ரொம்ப தாங்க்ஸ் டா", என்ற போது. "உனக்கு சர்ப்ரைஸா இருக்கனும்னு தான் சொல்லலை" என்றான்.