13 அக்டோபர், 2016

அம்மாவின் ஆசிர்வாதம்

காலையில் வழக்கம் போல் வேலைகளை முடித்து விட்டு அம்மாவிடம் தொலைபேசியில் பேசினேன். வாழ்க்கை பல பாடங்களை கற்று கொடுக்க அவற்றை அலுப்பில்லாமல் மனதிடத்துடன் கற்று, பல இன்னல்களை தாண்டி திடமான இப்போதிருக்கும் அம்மாவின் மேல் அன்பும், மதிப்பும் அதிகமாகிறது.

எவ்வளவு பெரிய பிரச்சனை ஆனாலும் இலகுவாகவும் தீர்க்கமாகவும் முடிவு எடுத்து அதில் திடமாக நிற்கும் இயல்பு அவரிடம் முன்பிருந்தே இருப்பதுதான் என்றாலும் என் பதினைந்து வருட திருமண வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களில் அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு அணுகுமுறையும் எவ்வளவு சரி என்பது தெள்ளத்தெளிவாக இப்போது புரிகிறது.

நீண்டகாலமாக எழுதுவதை விட்டு இப்போது மீண்டும் தொடங்க வேண்டும் என்ற ஆவல் இருப்பதை நான் சொன்னவுடன் "உடனே ஆரம்பித்து விடு" என்றார். "எழுதினால் யாருக்கேனும் உபயோகமாக எழுத வேண்டும் இல்லாவிட்டால் பயன் இல்லை அம்மா" என்ற போது நெத்தியடியாய் ஒன்று சொன்னார், "உனக்கு பிடித்ததை, நீ அவதானித்த செய்திகளை எழுதுவதற்கு என்ன தயக்கம்? இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் உன்னால் எதையுமே செய்ய முடியாது, தயங்காமல் ஆரம்பித்து விடு" என்றார். "எழுதுவது உனக்கு விருப்பம் என்றால் எழுது. என்ன பயன் வேண்டும். அந்த செயல் தரும் நிறைவே பயன் தான்". என்றார். சரி தானே என்று நினைத்த போது, கூடவே மேலும் ஜீரணிக்க சிரமமான சில குண்டுகளையும் தூக்கிப் போட்டார்.

"இந்த உலகத்தில் யாருக்கும் எதுவும் உருப்படியாக செய்ய தெரியாது, யாராவது ஒரு நோக்கம் கொண்டு எதையாவது முயற்சி செய்தால் அதை விமர்சனம் செய்யத்தெரியும், பின் இவங்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமானது என்று அங்கலாய்க்க தெரியும். ஏதாவது செய்து அந்த முயற்சியை தடை செய்யத்தெரியும். இது உனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அதே தான். இந்த தடங்கல்களைத் தாண்டி தைரியமாக என்று செல்கிறாயோ அன்று உனக்கு எல்லா முயற்சியும் பலன் அளிக்கும்" என்றார்.

உண்மை தானே? எல்லாம் நிதர்சனம். சரி முயற்சிப்போமே என எழுத தொடங்கி விட்டேன். நன்றி அம்மா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக