23 மே, 2011

எதிர்பாரா வாழ்த்து

எதிர்பாரா வாழ்த்து




--------------------------------------------------------------------------------



அன்று என் பிறந்த நாள். காலை கண்விழித்தவுடன் கணவரின் வாழ்த்து. வழக்கம் போல் சமையலை ஆரம்பித்து அதில் என்னை மறந்தேன். என் பெரிய மகன் விழித்தெழுந்தான். அறையை விட்டு வெளியே வந்தவுடன், வாழ்த்து சொல்வான் என எதிர் பார்த்தேன். சொல்லவில்லை. சரி மறந்திருப்பானோ என விட்டு விட்டேன். சற்று நேரத்தில் இன்று உங்க அம்மாவுக்கு பிறந்த நாள் தெரியுமா? என்ற அவன் தந்தையின் கேள்விக்கு மேல் கீழாகத் தலையசைத்தான். அப்போதும் கூட வாழ்த்து சொல்லவில்லை. நான் சும்மா இல்லாமல் இனி அவன் பிறந்த நாளுக்கும் இப்படியே செய்வோம் என்று சொன்னேன். பாவம் அவன் முகம் வாடிவிட்டது. அதற்கு கூட அவன் பதில் பேசவில்லை. அப்புறமும் விடாமல் "ஏண்டா தம்பி அம்மா மேல கோபமா? என்றேன்". "இல்லம்மா உனக்கு ஆட்டோமேட்டிக்கா வாழ்த்து வரும்" என்றபடி பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நடந்து கொள்வது முதல் முறையாக புதிராக இருந்தது. என்னவோ சரி என விட்டு விட்டு வேலை மும்முரத்தில் பிறந்த நாளை மறந்தும் போனேன். பின் சின்ன மகனை பள்ளியில் விட்டு கோவிலுக்கு சென்று வந்து மற்ற வேலைகளை பார்த்தேன். சின்ன பிள்ளை பள்ளி விடும் நேரமானது. அழைத்து வருவதற்காக கிளம்பி சென்று மின் தூக்கிக்காக காத்திருந்த போது என் பாக்கெட்டிலிருந்து வித்தியாசமான இசை கேட்கவே திடுக்கிட்டேன். அட கைத்தொலைபேசி ரிங்க் டோன் மாறி விட்டதா? இல்லையே சற்று முன் கூட ஒரு கால் வந்ததே அதற்கு வாய்ப்பே இல்லையே எனக்குழம்பியபடி, வெளியில் எடுத்து பார்த்தால், ஹேப்பி பர்த்டே என மின்னிய படியே இசை பாடியது. சரியாக நான் பிறந்த நேரத்தில் வாழ்த்து வரும்படி செட் செய்திருக்கிறான். சின்னவனாக இருக்க வாய்ப்பில்லை. எம்டி மெசேஜ் அனுப்பவும், கேம் விளையாடவும் மட்டுமே அவனுக்கு தெரியும். அவங்க அப்பாவுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. பெரியவன் தான். இரு நாட்களுக்கு முன் நீ பிறந்த நேரம் பகலா, இரவா? எத்தனை மணிக்கு பிறந்தே என்றெல்லாம் துளைத்தது இதற்கு தானோ என்றெண்ணிய போதே என் கண்களில் நீர் வழிந்தது. இந்த பிள்ளையை எவ்வளவு வருத்தப்படுத்துகிறோம் என்று தோன்றியது. அன்று அவன் பள்ளி விட்டு வந்தவுடன் மிகச் சாதாரணமாக "என்ன வாழ்த்து வந்ததா?" என்றான். "ரொம்ப தாங்க்ஸ் டா", என்ற போது. "உனக்கு சர்ப்ரைஸா இருக்கனும்னு தான் சொல்லலை" என்றான்.

10 மே, 2011

எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம் - 2

சென்ற இடுகையில் இருந்த கேள்விகளுக்கு விடை...

அவனுடைய மம்மி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு நூறு ஊன்று கோல்கள் இருந்தனவாம். இவை ஏன்?


டட்டுக்கு எலும்பு சுலபமாக முறியும் ஒரு வியாதி இருந்திருக்கிறது. அதனால் அவன் ஊன்று கோலின் துணையுடன் நடந்திருக்கிறான்.


டட்டுக்கு தானே நாட்டை ஆளும் வயது வந்த போது ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டான். ஏன்?

அந்த மம்மியை பரிசோதனை செய்தபோது, மலேரியா கிருமிகளின்
பாதிப்பு தெரிய வந்துள்ளது. அந்த காலத்தில் மலேரியாவிற்கு மருந்து இல்லை என்பதால் இறந்திருக்கிறான்.


டட் பற்றி இன்னும் சில செய்திகள் அறிய இங்கு கிளிக்குங்கள்: முதல் பாகம்

28 ஏப்ரல், 2011

எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம்

படிப்பதற்கு முன் ஒரு நிபந்தனை..
படிக்கும் போது உங்க மனசுல தோணுற சில வசனங்களும் அடைப்புகுறிக்குள்ள இருக்கும், அதெல்லாம் சரியான்னு கண்டிப்பா கருத்துரைல சொல்லனும்! இல்லன்னாலும் வேற என்ன தோணிச்சுன்னு சொல்லனும், சரியா? (அட கருத்துரை வாங்க இப்படி ஒரு புது ஐடியாவா? அவ்வ்...)


அம்மா எங்கள் டீச்சர் கொடுத்தாங்க, படிக்கிறாயா? என்று இரு மாத இதழ்களை நான் பார்த்துக்கொண்டிருந்த நாளிதழின் மேல் வைத்துவிட்டு வீட்டுப்பாடத்தில் மூழ்கினான் என் மகன். அதில் வேகமாக விழிகளை ஓட்ட முதலில் கவனத்தை ஈர்த்தது 3000 ஆண்டுகள் முன்பு இறந்து போன அரசன் டட்டின்  மம்மி பற்றிய செய்தி தான். முன்பு பார்த்து மறந்து போன மம்மி படங்களின் காட்சிகள்  நினைவுக்கு வர படித்ததில், அதிலிருந்த மூன்று பக்க விஷயம் நிறையவே யோசிக்க வைத்தது. இப்படித்தான் ஆரம்பித்தது எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம். எதையும் முழுதாக தெரிந்து கொண்டு விட எப்போதும் போல் பற்றிக்கொண்ட ஆர்வம் மேலும் சில தகவல்களை தேடவைத்தது. அதில் கிடைத்த சுவரஸ்ய சங்கதிகள் சில உங்களுக்காக....


முன்பு என் பள்ளிப்பருவத்தில் முதன் முதலாக  மம்மிகளையும், பிரமிடுகளையும் பற்றி என் அப்பா விவரித்து சொன்னார்,...
ஒரு அரசன் இறந்து போனால் அவனுடன் சேர்த்து ஒரு ராணுவத்தையே கொன்று பதப்படுத்தி பிரமிடுகளில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். அவை இன்னும் கெடாமல் இருக்கின்றன என்று. ஒரு காவலன் இறந்து விட்டால் அது போல அரசனை கொன்று வைப்பார்களா என்று  நான் கேட்டது நினைவிருக்கிறது. (என்ன மொக்கை லாஜிக்!!!) எல்லா உயிர்களும் சரி சமம் தான்னு அன்னைக்கு தாங்க என் ஆசிரியை பள்ளியில் சொல்லியிருந்தாங்க ஹ ஹ. (என்னா கொல வெறீ !!!???!!!)

டட்டின் மம்மி இருக்கும் பெட்டி
சரி இனி அரசன் டட்டன்கேமன் பற்றி சில தகவல்கள்:
  • டட் அமர்னா என்ற எகிப்த்திய நகரத்தில் வளர்ந்தான்.
  • அப்போதைய எகிப்த்து அரசனான அவன் தந்தை டட்டின் ஒன்பது வயதில் இறந்து விட்டதால் அப்போதே அரசனாகி விட்டான்.
  • இவ்வளவு சிறிய வயதில் அரசனான டட்டுக்கு நாட்டை ஆள பெரியவர்களின் உதவி தேவைப்பட்டது.
  • டட்டின் செருப்பின் உள் பக்கத்தில் அவனுடைய எதிரிகளின் படங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன. நடக்கும் போது மிதித்து கொல்வதாக நினைத்துக்கொள்வார்களாம்.
  • அவனுடைய மம்மி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு நூறு ஊன்று கோல்கள் இருந்தனவாம். இவை ஏன்?
  • டட்டுக்கு தானே நாட்டை ஆளும் வயது வந்த போது ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டான். ஏன்?

இவற்றுக்கு விடையும், மேலும் சில ஸ்வாரஸ்ய தகவல்களையும் அடுத்த இடுகையில் தருகிறேன். (பெரிய மெகா சீரியலு!! தொடரும் போட்டிருக்காங்க!! ஆனாலும் படிக்க  நல்லாத்தான் இருக்கு!!) இல்லன்னாவது எழுதி தானே ஆகனும். எப்புடி?

27 ஏப்ரல், 2011

மனதில் விழுந்த சாட்டையடி

சென்ற வாரம் மழையில்லாத ஒரு மாலையில் பிள்ளையை பூங்காவில் விளையாட விட்டு அமர்ந்திருந்தேன். எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடன் சென்று அதிலேயே மூழ்கி படித்துக் கொண்டிருந்துவிட்டு நேரம் முடிந்தவுடன் திரும்பி வந்து விடுவது உண்டு. அன்று கையில் புத்தகம் இல்லை. பேசுவதற்கும் யாரும் தென்படாததால், பார்வை அங்கிருந்த அனைவரின் மேலும் ஓட ஒரு சிறுமியின் செயல்கள் எனை ஈர்த்தது.

ஏறக்குறைய பத்து வயதிருக்கும் அவளுக்கு, தன் உயரம் இருந்த தன் சகோதரனை சுமந்து கொண்டு வந்தாள். கயிற்றில் கட்டப்பட்ட விளையாட்டு தீமின் ஒரு புறத்தில் அமரச் செய்து, ஒவ்வொரு அடியாக எங்கு வைக்க வேண்டும் என சொல்லித்தந்து அவன் தடுமாறி விழப்போன போதெல்லாம் தாங்கிப் பிடித்து, அவன் தயங்கிய போதெல்லாம் முடியும், முடியும் என் ஊக்கம் கொடுத்து, அவன் அதில் மறு முனைக்கு செல்லும் வரை பக்கத்திலேயே இருந்து பின் மறுபடியும் சுமந்து சென்றாள். ஒரு கனம் கூட அவள் முகம் சுளிக்கவில்லை. அவன் மனவளர்ச்சி குன்றிய சிறுவன். அந்தக் காட்சியை பார்த்ததும் என்னுள் என்னவோ மாற்றம்.

அந்த சிறுமிக்கு இந்த சிறிய வயதில் எவ்வளவு பொறுமை, மன முதிர்ச்சி, பாசம், அந்தக் கண்களில் தெரிந்த தாய்மை உணர்வு எல்லாம் சேர்நது என் மனதில் ஒரு சாட்டையடி விழுந்தது போலிருந்தது.

எவ்வளவு பெரிய பொக்கிஷமான வாழ்க்கையை ஒன்றுக்கும் பிரயோசனமில்லா விஷயங்களுக்காக வருந்தி வீணடிக்கிறோம் என்ற குற்ற உணர்வு மேலிட்டது. சிறுவயதில் தம்பியுடன் சண்டையிட்ட காலங்கள் கண்முன் தோன்றி அதை அதிகப்படுத்தியது. நன்றாகவே படிக்கும் பிள்ளையை, அவன் முயற்சியை பாராட்டாமல் முதல் மதிப்பெண் எடுக்கச்சொல்லி வருத்துவதிலிருந்து அனைத்தும் நினைவுக்கு வந்து கலவரப்படுத்தியது. என்ன செய்து கொண்டிருக்கிறோம், யாருக்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று எப்போதும் ஒப்பீடு செய்யும் மனதை சாட்டையடி வாங்கிய மனம் கேள்வி கேட்டது.

இனிமேல் பிள்ளைகளை அடிக்கவே கூடாது எனும் தீர்மானம் மனதில் நிறைவேறியது. இனியாவது இதை விடாமல் பின்பற்றுவேன் என்று நினைக்கிறேன்.

25 ஏப்ரல், 2011

மீண்டும் உனக்காகக் காத்திருக்கிறேன்...

என் பலவருடக்
காத்திருப்புக்குப் பின்
எனை அள்ளிக்கொண்டாய்...
என் நிறத்தில்
இன்னும் சிலவற்றையும்
சேர்த்துத்தான்..
சந்தோஷமாக
எங்கோ புறப்பட்டாய்...
அன்று இரண்டாம் முறையாக
உனக்கு உபயோகப்பட்டேன்..
அன்று முழுதும்
இன்பமாகவே இருந்தாய்...
என்னுடன் நீ மிகவும் அழகாக
இருப்பதாக எல்லோரும்
சொன்னார்கள்...
உன் முகத்தில் புன்னகை...
இரவுக்கு முன் நிழலில்
எனை உலர்த்தினாய்...
உன் வியர்வை என்னிலிருந்து
விடுபட்டுப்போக...
உலர்ந்தேன்...காய்ந்தேன்...
சற்று நேரத்தில் சூடு வாங்கி
பின் காத்திருக்கப்போகிறேன்...
அடுத்த அரை நூற்றாண்டில்
அதிக பட்சம் ஒரு முறை
உன் கண்கள் என் மீது
மறுபடியும் விழும்
என்ற நம்பிக்கையுடன்
நீ ஆசையாய்
எனை எடுத்து
மீண்டும் அழுக்காக்க...
என் போன்ற இன்னும் ஐந்தாறு
பட்டுப் புடவைகளுடன்...
உன் வீட்டு அலமாரியின்
ஆரவாரமில்லா மூலையில்
அலங்காரமாய்த் தொங்கியபடி
தங்கக்கரையுடன்
சிவப்பு நிறத்தில் நான்...