27 ஏப்ரல், 2011

மனதில் விழுந்த சாட்டையடி

சென்ற வாரம் மழையில்லாத ஒரு மாலையில் பிள்ளையை பூங்காவில் விளையாட விட்டு அமர்ந்திருந்தேன். எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடன் சென்று அதிலேயே மூழ்கி படித்துக் கொண்டிருந்துவிட்டு நேரம் முடிந்தவுடன் திரும்பி வந்து விடுவது உண்டு. அன்று கையில் புத்தகம் இல்லை. பேசுவதற்கும் யாரும் தென்படாததால், பார்வை அங்கிருந்த அனைவரின் மேலும் ஓட ஒரு சிறுமியின் செயல்கள் எனை ஈர்த்தது.

ஏறக்குறைய பத்து வயதிருக்கும் அவளுக்கு, தன் உயரம் இருந்த தன் சகோதரனை சுமந்து கொண்டு வந்தாள். கயிற்றில் கட்டப்பட்ட விளையாட்டு தீமின் ஒரு புறத்தில் அமரச் செய்து, ஒவ்வொரு அடியாக எங்கு வைக்க வேண்டும் என சொல்லித்தந்து அவன் தடுமாறி விழப்போன போதெல்லாம் தாங்கிப் பிடித்து, அவன் தயங்கிய போதெல்லாம் முடியும், முடியும் என் ஊக்கம் கொடுத்து, அவன் அதில் மறு முனைக்கு செல்லும் வரை பக்கத்திலேயே இருந்து பின் மறுபடியும் சுமந்து சென்றாள். ஒரு கனம் கூட அவள் முகம் சுளிக்கவில்லை. அவன் மனவளர்ச்சி குன்றிய சிறுவன். அந்தக் காட்சியை பார்த்ததும் என்னுள் என்னவோ மாற்றம்.

அந்த சிறுமிக்கு இந்த சிறிய வயதில் எவ்வளவு பொறுமை, மன முதிர்ச்சி, பாசம், அந்தக் கண்களில் தெரிந்த தாய்மை உணர்வு எல்லாம் சேர்நது என் மனதில் ஒரு சாட்டையடி விழுந்தது போலிருந்தது.

எவ்வளவு பெரிய பொக்கிஷமான வாழ்க்கையை ஒன்றுக்கும் பிரயோசனமில்லா விஷயங்களுக்காக வருந்தி வீணடிக்கிறோம் என்ற குற்ற உணர்வு மேலிட்டது. சிறுவயதில் தம்பியுடன் சண்டையிட்ட காலங்கள் கண்முன் தோன்றி அதை அதிகப்படுத்தியது. நன்றாகவே படிக்கும் பிள்ளையை, அவன் முயற்சியை பாராட்டாமல் முதல் மதிப்பெண் எடுக்கச்சொல்லி வருத்துவதிலிருந்து அனைத்தும் நினைவுக்கு வந்து கலவரப்படுத்தியது. என்ன செய்து கொண்டிருக்கிறோம், யாருக்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று எப்போதும் ஒப்பீடு செய்யும் மனதை சாட்டையடி வாங்கிய மனம் கேள்வி கேட்டது.

இனிமேல் பிள்ளைகளை அடிக்கவே கூடாது எனும் தீர்மானம் மனதில் நிறைவேறியது. இனியாவது இதை விடாமல் பின்பற்றுவேன் என்று நினைக்கிறேன்.

2 கருத்துகள்: