11 ஏப்ரல், 2011

என் வழி தனீ... வழி!

மளிகையும், காய்கறியும் ஸ்டாக் தீர்ந்து விட்டதால், அந்த வாரயிறுதி  நாள் குடும்பத்துடன் முஸ்தஃபா போகலாம் என முடிவாயிற்று. சிங்கப்பூரிலேயே பெரிய இந்திய ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ். உள்ளே சென்றால் வெளியே வருவதற்குள் நடந்தே சோர்ந்து விடுவோமென்றாலும் அத்தனை பொருட்களையும் ஒரே கடையில் வாங்கலாம் என்பதால் வேறு எங்கும் செல்ல பிடிப்பதில்லை. பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கு போய் கோபப்படாமல் வருவது என்பது பெரிய விஷயம் தான். அங்கும் இங்கும் ஓடி கண்மறைய, போய் விளையாடி அவ்வப்போது பயமுறுத்தும் பிள்ளைகளை அடிக்காமல் திட்டாமல் அரவணைக்க இன்னும் முயற்சிக்கிறேன். 
அன்றும் என் சின்ன மகன் ஒரு ஷாக் கொடுத்தான். நல்ல வேளை கூட்டம் அவ்வளவாக இல்லாததால் ஷாக்கின் வாட்ஸ் மிதம். பக்கத்திலேயே விளையாடிக்கொண்டிருந்தவன் திடீரென்று காணவில்லை. கூப்பிட்ட குரலுக்கு பதிலில்லை என்றதும் பதறி தேட ஆரம்பிக்க மூன்று நிமிடங்களுக்கு பிறகு சாவகாசமாக ஏன் கத்துற என்ற பார்வையுடன் பெரிய மனிதனாட்டம் வந்து நின்ற அழகு இருக்கிறதே, எனக்கு அப்பாடா என்றிருந்தது. பட்ட டென்ஷனுக்கு "எங்கடா போய்ட்ட, கூப்பிட்டா ஏன்னு கேக்கமாட்டே, எங்கயாவது போய்ட்டா எப்படி வழி கண்டுபிடிச்சு இங்க வருவ?" என நான் படபடக்க,
 கொஞ்சமும் பதட்டமில்லாமல் அவன் சொல்லியது என்னை அதிசயிக்க வைத்தது அது "என் வழி தனீ வழி". பார்ப்பதெல்லாம் பே ப்லேடும், ஜெரோனிமோவும் என்றாலும், இந்த தமிழ் திரைப்பட வசனங்கள் எங்கிருந்து கற்கிறான் என்ற குழப்பம் இன்னும் இருக்கிறது. நர்சரி பள்ளியில் பயிலும் குழந்தை, எப்போதோ பார்த்த வசனங்களை நினைவில் வைத்திருப்பதும் ஆச்சரியம் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக