13 செப்டம்பர், 2010

உனக்கு மட்டும் தான் தாத்தா இருந்தாரா?

அட இப்படி ஒரு கதையா? என்று நினைக்கவைத்த ஒரு கதையை உங்களுடன் பகிர்கிறேன்...

மிஸ்டர் சங்கரனுக்கு ஒரு தாத்தா இருந்தார். அவர் ஒரு பெரிய குல்லா வியாபரி. பரம்பரையாகவே சங்கரனின் குடும்பம் குல்லா வியபாரம்தான் செய்து வந்தார்கள். எனவே சங்கரனும் குல்லா வியாபாரமே செய்து வந்தார். அவரது தாத்தா குல்லா  விற்பனையில் தனது சாதனைகள், அனுபவங்கள், விற்பனை நுணுக்கங்கள் எல்லாவற்றையும் விரிவாக அவருக்கு கற்றுக்கொடுத்திருந்தார். எனவே சங்கரனும் தாத்தாவின் அறிவுரைகளை நினைவில் வைத்து குல்லா விற்பனை செய்து வந்தார்.

ஒரு முறை சங்கரன் ஒரு கிராமத்தில் குல்லா விற்றுவிட்டு அடுத்த கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். பாதி தூரம் செல்லும் போது ஒரே வெய்யிலாக இருந்ததால் ஒரு மர நிழலில் ஓய்வெடுத்துவிட்டு செல்ல தீர்மானித்தார். குல்லா மூட்டையை பாதுகாப்பாக அருகிலேயே வைத்துவிட்டு சற்று கண்ணயர்ந்தார். சற்று நேரத்துக்குப்பிறகு க்றீச் க்றீச் என்ற ஒலி அருகில் கேட்கவே திடுக்கிட்டு கண்விழித்தார். முதலில் மூட்டையை பார்த்தார் ஆ ஒரு குல்லாய் கூட மூட்டையில் இல்லை. அங்குமிங்கும் பார்த்தவர் மரத்தின் மேலிருந்த குரங்கு கூட்டத்தை பார்த்து அசந்து போனார். ஒவ்வொரு குரங்கின் தலையிலும் ஒவ்வொரு குல்லாய். 

ஆனால் சங்கரன் அலட்டிக்கொள்ளவே இல்லை. ஏனென்றால் இந்த நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என அவருக்கு தாத்தா சொல்லி கொடுத்திருக்கிறார்.  நாம் செய்வதையே குரங்குகளும் திரும்ப செய்யும் எனவும் தலையில் உள்ள ஒரு குல்லாயை வைத்து எல்லாவற்றையும் திருப்பிவிடலாம் என நினைத்தார்.

மரத்தின் மேலிருந்த குரங்குகள் எல்லாம் அவரை பார்த்து பல்லை காண்பித்து இளித்துக்கொண்டிருந்தன.

'சிரிக்கிறீர்களா? முட்டாள் குரங்குகளே உங்களிடமிருந்து எப்படி குல்லாய் வாங்குவது என எனக்கு தெரியும்' என்று மனதிற்குள் சிரித்தவாரே தனது தலையிலிருந்த குல்லாயை தூரமாய் தூக்கி எறிந்து விட்டு அலட்சியமாக மேலே பார்த்தார்.

அட, இது என்ன, ஒரு குரங்கு கூட குல்லாவை தூக்கி எறியவில்லையே என்று நினைத்த போது ஒரு குட்டிக்குரங்கு மரத்திலிருந்து வேகமாக இறங்கி வந்து இவர் வீசி எறிந்த குல்லாவை எடுத்துக்கொண்டு மரத்தின் மேலேறிக்கொண்டது.

சங்கரனுக்கு ஒரே ஆச்சர்யம், என்னங்க ஆதி இப்படி ஆகிப்போச்சே! என்ன கொடும சரவணன் இது!  என்னங்கடா   இது புது தினுசா இருக்கு! உக்காந்து யோசிப்பாய்ங்களோ என்றெல்லாம் ரெடிமேட் வசனங்களுடன் அவர் அங்கலாய்க்கும் போது, இன்னொரு அதிர்ச்சி,
அந்த குட்டிக்குரங்கு பேசியது "உனக்கு மட்டும் தான் தாத்தா இருந்தார்னு நினைச்சுகிட்டியா?"

2 கருத்துகள்: