10 டிசம்பர், 2010

மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....

பொதுவாக படிப்பது என்றாலே குதூகலமான செயல் எனக்கு. அதிலும் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பேஷன் மாறுவதைப்போல என் அபிமானமும் புல் தாவரத்திலிருந்து ஏரொ நாட்டிகல் தொழில்னுட்பம் வரை ஒன்று விடாமல் ஓயாமல் தாவுவதுண்டு. அதற்கேற்றார்போல் சிங்கை தேசியக் கிளை நூலகமும் பத்து நிமிட நடையில் சென்றடையும் இடத்திற்கு தானாகவே இடம்பெயர வீட்டை விட்டு இறங்கினால் கால்கள் தாமாகவே அங்கு தான் செல்கின்றன. சமீப காலமாக ஆன்மிகம் கவனமீர்க்கிறது.
  • தன்னை உணருதல் என்றால் என்ன?
  • நம் யுனிவர்ஸ் தோன்றியது எப்படி? (பெரு வெடிப்பு கொள்கை-big bang theory என்னை சமாதானப்படுத்தவில்லை) அப்படியே இருந்தாலும் ஏன் தோன்றியது?
இவைதான் இப்போது என்னைக்குடையும் கேள்விகள். அவை பற்றிய நூல்களையும் வலை உலாவிலும் தேடியதில் கண்ணில் பட்டது எழுத்தாளார் பாலகுமாரனின் சிந்தனைகள்...
முதல் கேள்விக்கு இந்த கருத்துக்கள் உதவும். நம்மை நாமே அறிந்து கொள்ள இவை ஆற்றும் பணிகள் கொஞ்சமல்ல. அவற்றில் சில...

  • மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....
  • தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்குத் தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும்
  • மிகவும் உற்றுக் கவனித்தால் நமது தேவைகள் மூன்றாம் மனிதரின் பாராட்டுக்காக ஏற்பட்டவை. மற்றவர்கள் பொறாமையோடு பார்ப்பது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.
  • உண்மையாய் பேச, மென்மையாய் வாழ பலபேருக்கு தெரியவில்லை. அப்படி வாழ்வதில் விருப்பமும் இல்லை.
  • ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதே இல்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகிறது. எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகிறான். யுத்தம் முடிந்து போய் பழிவாங்குதல் வந்து விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது. தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.


  • எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும்.
  • தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது.
  • கூரிய அறிவாலும், ஆழ்ந்த பக்தியாலும் இறைவன் கண்ணுக்குத் தெரிவானோ.. சத்தியத்தை அறிய சத்தியமாகவே இரு. திருவருள் வசப்பட்டு அதனாலே அதை அடையலாம். உனது உன்னுதலால் எதுவும் முடியாது. அகந்தையின் முயற்சி இதில் மட்டும் உதவாது.
  • அகந்தை அழிக்கும் முதல் படி தான் யார் என்று கேட்டுக்கொள்வது. தான் யார் என்று அறியும் நோக்கத்தோடு யோசிப்பவனை நிலை நிறுத்தத்தான்


    உருவ வழிபாடு. ஒன்றில் மனசு நிலைப்பட மற்றவை காணாது போகும்.

    மற்றவை தொந்திரவு இல்லாதபோது ஒப்புக்கொண்ட ஒன்றையும் எடுத்து எறிந்துவிட முடியும்



  • எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.

    .
    மேலும் படிக்க...
தேடல் தொடரும் வரை இடுகைகளும் தொடரும்.

2 கருத்துகள்: