20 டிசம்பர், 2010

மாயமாய் மறையும் மந்திர மனிதன் உண்மைச்சம்பவம் (நிறைவுப்பகுதி)

இன்னும் கொஞ்சம்   நேரம் சென்றதும் கதை முடிந்தது. தம்பிடம் போட்ட ஜன்னலோர இருக்கை ஒப்பந்தம் அடுத்த பகுதிக்கு வர நான் ஓரத்திலும் அவன் நடுவிலும் மாறி அமர பயணம் தொடர்ந்தது. ரயிலில் சாப்பாடு வாங்கி அப்பா தர எல்லோரும் சாப்பிட்டோம். வழக்கம் போல் முழு சாப்பாடு சாப்பிடாத
தற்கு என்னை திட்டி விட்டு மீதி முக்கால் சாப்பாட்டை தானம்
கொடுத்தார்கள்.  அவன் என் தம்பி மட்டும் எப்படியோ சாப்பாட்டிற்கு திட்டு வாங்காமல் சாப்பிட்டு முடிச்சுடுறான்.
இந்த களேபரத்தில் எல்லாம் மறந்து,  வேடிக்கை பார்ப்பதில் மனம் லயித்திருக்க, அங்கு வந்த அவர் அதான் புத்தகம் கொடுத்து படிக்க சொன்ன ஆள் எல்லோர் கையிலிருந்தும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ பெற்றுக்கொண்டு  நகர்ந்தார், இல்லை மீண்டும் என் பக்கம் திரும்பி ஒரு முறை முறைத்து பாப்பா அந்த புத்தகத்தை கொடு என்று கேட்டார். நான் தயங்க, என் அப்பாவுக்கு அவர் புத்தகத்தை தர மாட்டேன் என்று சொல்வதாக புரிந்து விட, கையிலிருந்து வேகமாக பிடுங்கி கொடுத்துவிட்டார்.  நாம் வாங்கினாலும் கொடுத்து விட வேண்டுமோ என்ற சந்தேகத்துடன் நான் குழம்பி, கேட்டால் திட்டு கிடைக்குமோ என அமைதியாயிருந்து விட்டேன். சற்று நேரத்தில் தம்பி கையிலிருந்த ஸ்போர்ட்ஸ்டாரும்
பறி போய்விட  இருவரும் விழித்தபடி இருந்தோம். உறக்கத்திலிருந்த அம்மா விழித்தவுடன் "அவன் கிட்ட இதுக ரெண்டும் மானத்த வாங்கிடுச்சுங்க" என்று அப்பாவே ஆரம்பித்தார்கள்.
எல்லா கதையும் கேட்டு விட்டு "அய்யோ இதுக ரெண்டும் புத்தகத்தை மெட்ராஸ்ல கடையில் வாங்குச்சுங்க. உங்களுக்கு  நியாபகம் இல்லையா?" என்றார் அம்மா.
"அவன் பெரிய இவனாட்டம் அவனோடதை வச்சுகிட்டு தராம ஏமாத்துற மாதிரியில்ல பேசினான். ஏன் எங்கிட்ட அப்பவே சொல்லல நீங்க?" என்ற அப்பாவின் குரலில் கனிவிருந்தது.
"பயமா இருந்துச்சு ப்பா"
"சரி அவன் போய்ட்டான், போனா போகட்டும் விடுங்க"
ஏமாற்றத்திலும் ஒரு நிறைவிருந்தது அப்பாவின் அன்புக்கு பாத்திரமானோம்.
"இதுவே பழக்கம் போலிருக்கு, இப்படிதான் அத்தனை புத்தகமும் சுட்டான் போலிருக்கு, திருட்டு பயல், முறைச்சானா அவன், ராஸ்கல், என்ன நினைச்சிகிட்டான் அவன்." என்ற அம்மாவின் கோபமும் சற்று
நேரத்தில் சரியாகிவிட ரம்மியமான பிற்பகலில் வேளையில் மயிலாடுதுறை ஜங்ஷனுக்கு வந்து இறங்கினோம். அதோடு மாயமாய் மறையும் மந்திர மனிதனும் மாயமாய் மறைந்து விட்டான்.

பின் குறிப்பு:
  1. அந்த மாயமாய் மறையும் மந்திர மனிதன் கதை ஆங்கில ஹாலோ மேன் படத்தின் உல்டா கதை என பிற்பாடு படம் பார்த்த போது தான் தெரிந்து கொண்டேன் ஹா ஹா... 
  2. தலைப்பை பார்த்து படிக்க வந்து ஏமாந்துவிட்டதாக ஃபீல் பண்னிணா ரொம்ப ஸாரி, உண்மைச்சம்பவம் னு எழுதியிருக்கும் போதே சுதாரிச்சிருக்கனும்....இப்படி எத்தனை பேர்டா கிளம்பியிருக்கிங்க ன்னு நீங்க சொல்றது காதுல கேக்குது.....
  3. வேலை மெனக்கெட்டு என் இடுகையை படிக்க வந்த அன்பர்களுக்கு என் பணிவான நன்றிகள்! நல்லாயிருந்திச்சுன்னா கருத்துரையில் சொல்லிடுங்க!

2 கருத்துகள்: