5 ஜனவரி, 2011

வெறுமை


எப்போதும் என் கழுத்தைக்
கட்டிக்கொண்டிருக்கும்
உன் கைகள்

அம்மா அம்மா என்றழைக்கும்
உன் இனிய குரல்

என்னைத்தூக்கியே
வைத்துக்கொள்
என்று கேட்கும்
உன் நீட்டிய கைகள்

நொடிக்கொரு முறை
அம்மாவை பார்த்து
இங்கு இருப்பதை
உறுதிபடுத்திக்கொள்ளும்
ஜாக்கரதை உணர்வு

மூன்று வயதிலும்
புட்டியில் பாலை
அம்மா மடியில் படுத்து
குடிக்க காத்திருக்கும்
அந்த பொறுமை

உன் தீராத விளையாட்டில்
திக்குமுக்காடிப்போகும் நான்

உன் வம்பில்
கோபம் தலைக்கேறி
சத்தமிட ஆரம்பித்தால்

அமைதியாய் அருகில் வந்து
அம்மா என்று அடிக்குரலில்
நீ செய்யும் சமாதானம்

இத்தனை நாட்கள்
நான் உன்னை
பார்த்துக்கொண்டேனா?
நீ என்னை
பார்த்துக்கொண்டாயா?

உன்னை மழலையர்
பள்ளியில்
விட்டு வெளியில்
நான் அழுகிறேன்

உன் முகம்
வாடியிருக்குமோ
வெளியில் நின்று
கதவிடுக்கில்
பார்க்கிறேன்

வீடுவர மனமேயில்லாமல்

அங்கேயே
ஒரு மணி நேரம்
சுற்றுகிறேன்.


நீ விளையாடுவதை பார்த்து
வீடுவந்த பின் தான் தெரிகிறது

ஒரு மணி நேரம்
ஓய்வு கிடைக்காதா
என ஏங்கிய நாட்கள் போய்

நீ இல்லாத இந்த நேரம்

வெறுமை சூழ்ந்து

தித்திப்பே இல்லாத
சர்க்கரை போல்

கசப்பே இல்லாத
பாகற்காய் போல்

உன் சத்தம் இல்லாத வீடு
அமானுஷ்ய அமைதியாய்

இந்த மூன்று மணி
நேரப்பிரிவு
யுகயுகமாய் நீள

தாங்கமுடியாமல்
தவிக்கிறேன்

கண்ணே உனக்கேனடா
இவ்வளவு அவசரமாய்
மூன்று வயது
முடிந்தது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக